சென்னை சென்ட்ரல் - 555 - பாகம் 3 - சந்தோஷ்

அலறியடித்த சாம்பல் புறா பதட்டத்துடன் இரயில்நிலையத்தின் அங்குமிங்கும் பறக்கிறது . அதன் பார்வையில் பயணிகள். பயணிகளின் உறவினர்கள், இரயில்வே ஊழியர்கள் என அனைவரும் கூச்சலிட தொடங்கினர். NSG அதிரடி படையினர். சென்டரல் இரயில்நிலையத்திற்குள் புகுந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.

சாம்பல் புறாவின் இறகுகள் எங்கும் பதட்டம் பதட்டம்... !!
பதட்டம்...! இரயில் நிலையத்திலும்.. ஊடகத்தின் செய்தியால் தமிழகத்திலும்.. இந்தியா எங்கும்..........!!

” தீவிரவாதிகள் வைத்த கோரிக்கை என்ன என்று தெரியவந்திருக்கிறது.. அதனை அரசு ஏற்கவில்லை என்று தெரிகிறது. ஆகவே அதிரடியாக ஒரு வெடிக்குண்டினை வெடிக்க செய்துள்ளனர் தீவிரவாதிகள். சென் ட்ரல் நிலையத்திலிருக்கும் இரயில் பயணிகளின் பாதுகாப்புக்கும் உடைமைக்கு அச்சுறுத்தல். தீவிரவாதிகள் அல்- வைதா தீவிரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று நிர்பந்தம் செய்வதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு மெத்தனப்போக்கு.. சரியா ? “
---- தின புரளி டிவியின் செய்தியாளர். அனுமானித்த விஷயத்தை ஆராய்ந்து தெரிந்ததாக பரப்புகிறார் தன்முன் இருக்கும் கேமாராவின் வழியே.... உலகத்திற்கு.
---------------------------------------------------------------------------------------------
நேரம் மதியம் 3 :30

தீவிரவாதியிடமிருந்து ஊடகங்களுக்கு செய்தி வருகிறது. தீவிரவாத தலைவி மாலை 5 மணி அளவில் சென்னை சென்ட்ரல் இரயில்நிலையத்திற்கு முன் பேட்டி அளிப்பதாக தகவல் . அனுப்பியவன் 10 வது நடைமேடையிலிருக்கும் இளவேந்தன.

சாம்பல் புறா.. அங்குமிங்கும் பறந்து மீண்டும் நிஷா இருக்கும் அந்த ஆர்.பி.எப் அலுவலகத்திற்கு வருகிறது. இம்முறை அலுவலகத்திற்கு உள்ளே சென்று நிதானமாக அமர்ந்து ஒரு லாங் சாட் பார்வையினை கண்ணாடி அறைக்குள் உள்நுழைக்கிறது. அதில்

நிஷா பானு -குழு தலைவி - . விஷ் காம் பட்டத்தாரி.- செய்தியாளர் -புதிய கலைமுறை டிவி. -சென்னை.
கார்த்திக்- குழுவின் ஆலோசகர் -தனியார் ஐ.டி கம்பெனியின் நிர்வாக தலைவர். -சென்னை .
கீதா- மருத்துவர் - குழுவில் ஒருவர். பெங்களூரை சேர்ந்தவள்.
கிறிஸ்டோபர் -இயற்பியல் முனைவர் வெடிக்குண்டுகளை தயாரித்த நிபுணர் - பெங்களூரை சேர்ந்தவள்.

நால்வரும் வரிசையாக ஒரு பெரிய உயர் அதிகாரம் படைத்த அதிகாரிகளின் முன் அமர்ந்து இருக்கின்றனர்.

” உங்க மூனுபேர்கிட்ட இருக்கிற கன்(துப்பாக்கி) பறிமுதல் செஞ்சாச்சு. நிஷா..! உன் கிட்ட இருக்கிற செல்போன்ல இப்போ சிக்னல் இருக்கா. இப்போ உன்கிட்ட மட்டும் தான் துப்பாக்கி இருக்கு. அண்ட் எங்களுக்கு உங்க நடவடிக்கைகள் எல்லாம் பார்த்தபிறகு நல்லாவே தெரியுது. நீங்க டிரெயிண்ட் டெரர்ரிஸ்ட் இல்ல. ஏதோ இஸ்யூ பண்ணத்தான் இப்படி பிளான் பண்ணியிருக்கீங்க. ஒரே நாள்ல எலலாத்தையும் மாத்திட முடியுமுன்னு மூடநம்பிக்கையில இருக்கிற யூத்ஸ் நீங்க. சோ, வெடிச்சா இரண்டு பாம்.. அது வெடிச்ச இடம், யாருக்கும் பாதிப்பில்லாம இருக்கு. உங்க பிளானும் அதுதான். பப்ளிக் இன்சூயூர் ஆக கூடாதுன்னு கவனமா இருக்கீங்க இல்லயா.. ஆக மீதி இருக்கிற பாம்ஸ் கண்டுப்பிடிக்கிற வேல நடந்துட்டு இருக்கு.....” என தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த உள்துறை உயர் அதிகாரியின் பேச்சை குறுக்கிட்ட நிஷா...

“ மாமு .. பிளேடு போடாதீங்க... இப்போ என்ன சொல்ல வர்றீங்க.? எங்கள ஸ்கூல் பசங்க மாதிரி உக்கார வச்சிட்டு அ. ஆ, இ. ஈ சொல்லிக்கொடுக்காம. என்ன மேட்டர்ன்னு போட்டு உடைங்க மாமு.... “ நிஷாவின் கிண்டலான பேச்சை ரசிப்பதாக நடித்த மற்றொரு அதிகாரி

“ ஹா ஹா.. மிஸ்..நிஷா.. யூ நாட்டி கேர்ள் “

“ தேங்க்ஸ் பாபுஜி. யூ ஆல் சோ செம கியூட்.. வயசானலும்.. ம்ம்ம்ம்ம் “ நிஷா கண்ணடிக்கிறாள்.

கிளுகிளுக்கிறது கிழட்டு அதிகாரியின் மனம்.

ஐ.ஜி ஆனந்த் குறுக்கிடுகிறார்.

” லிஸன் மிஸ் நிஷா.. உங்க கூட வந்திருக்கிற இன்னொரு ஆள் எங்க இருக்கிறார். ? அவர் யார் ? நீங்க சொன்னதுப்போல மீதி குண்டு எங்க எங்க இருக்குன்னு சொல்லுங்க. நீங்க எல்லாரும் பார்த்தா படிச்சவங்க மாதரியும் இருக்கீங்க. பப்ளிக செத்துப்போவதை விரும்பமாட்டிங்கன்னு நம்புறோம். உங்க டிமாண்ட்ஸ் பத்தி கவர்மெண்ட் கண்டிப்பா நடவடிக்கை எடுக்கும். நான் கேரண்டி “ ஐ.ஜி ஆனந்த - இது உளவியல் ரீதியில் பேசப்படும் மூளைச்சலவை பேச்சு.

இப்போது கீதா பேச ஆரம்பிக்கிறாள். “ என்ன சார் .. மிக்சிக்கு நான் கேரண்டின்னு விளம்பரத்தில சொல்றமாதிரி சொல்றீங்க. நாளைக்கே உங்கள ஆளில்லாத காட்டில ப்ரோமஷன் கொடுத்து தூக்கிபோட்டிருவாங்க. நாங்க எங்க வந்து கேரண்டியை தேடறது.? இந்த நாட்டு அரசியல்வாதிகள் நம்பி கேரண்டி இல்ல.. கரண்டி கூட கொடுக்காதீங்க பாஸ்.... “

வாக்குவாதம் நீடிக்கிறது. சாம்பல்புறா... மெளனமாக கவனமாக அங்குபேசுவதை கண்ணாடி அறைவழியே கவனிக்கிறது.
சற்று நிமிடம் வாக்குவாதம் நீடிக்கிறது.

நேரம் மாலை 4 : 00 மணி.

சாம்பல் புறா....இப்போது மிகவும் இயல்பாக ஏதோ பொழுதுப்போக்கு ரியாலிட்டி ஷோ பார்ப்பதை போல அங்குமிங்கும் பறந்து உக்கார்ந்து காட்சிகளை படம்பிடிக்கிறது. இப்போது அதன் விழியில் ஒரு காட்சி.

NTEV -ஆங்கில சேனலின் செய்தியாளர் பெண். ஜீன்ஸ் பேண்ட் . டைட் டாப்ஸ் அணிந்து படு ஸ்டைலாக ஒரு செய்தியை நேரடி ஒளிபரப்பாக சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வாசிக்கிறாள்.


சென்னை சென்ட்ரலில் ஊடுருவிய தீவிரவாதிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு விடுத்த கோரிக்கை என்ன என்று வெளியாகியுள்ளது. அந்த தீவிரவாத குழுவிலுள்ள இளவேந்தன் எனும் ஒருவர் சற்றுமுன் நமது நியூஸ் சேனலுக்கு தந்த தகவல் இது.

===மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கை : சிகரெட் விற்பனையை நாடு முழுவதும் தடை செய்ய விடுத்த கோரிககையை அரசு இதுவரை ஏற்கவில்லை.
மாநில அரசுக்கு விடுத்த கோரிக்கை : அரசு மதுபானக்கடையை உடனே மூட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. தனியார் நிறுவனங்கள் கல்வி சேவையை வியாபாரமாக செய்யக்கூடாது. கல்வி சேவையினை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு அரசின் முடிவு என்ன என்று இதுவரை அறிவிக்கவில்லை.

மக்களின் நலனை விட .. வருமானத்தின் நலனும். சில தொழிலதிபர்களின் நலனும் அரசுக்கு முக்கியம் என்று கருதுகிறதோ என்றும் நாங்கள் அச்சப்படுகிறோம் ஆகவே , அரசிற்கு கடும் கண்டன்ம் தெரிவிக்கும் வகையில் மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலில் வைக்கப்பட்ட அதிநவீன வெடிக்குண்டு நிச்சயம் வெடிக்கும். நாட்டின் விடுதலைக்காக பல லட்சம் பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர் .அதுப்போலத்தான் இப்போது சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருக்கும் மனிதர்களின் உயிர் பறிக்கப்படுகிறது. இதற்கு முழு காரணம் நாங்கள் அல்ல. மத்திய மாநில அரசுகளே..!===

இவ்வாறு பகிரங்கமான ஒரு மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. பயணிகளின் உயிரை விட சிகரெட்டும்.மதுவும், தனியார் கல்வி நிறுவனங்களின் நலனும் அரசுகளுக்கு முக்கியமா.. தீவிரவாதிகளின் கோரிக்கையில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. என்ன செய்ய போகிறது மத்திய மாநில அரசுகள். இன்னும் ஒரு மணி நேரத்தில்.... ?

பரபரப்பான சூழ்நிலையில் சென்னை சென்ட்ரல்.

சாம்பல்புறா........... ஆங்கில நியூஸ் சேனல் பெண் செய்தியாளரின் அறிவிப்பை உற்று கவனித்த பிறகு , மீண்டும் ஆர்வமாகவும் பரபரப்பாகவும் மீண்டும் ஆர்.பி.எப் அலுவலகத்திற்கு செல்கிறது.



The final countdown starts now.........



(தொ--ட..ரு. ம் ) -- ( அடுத்த பாகத்தில் பரபரப்பாக வெடிக்கும் )

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (6-Feb-15, 7:37 am)
பார்வை : 153

மேலே