பறந்து பரந்து
பறந்து... பரந்து...
என்
எழுத்துப்படாத
தாள்கள்
படபடக்கின்றன
உன்னைப் போலவே
உன்னை எழுத
எண்ணும் போது
தாள்கள்
தமக்குக் கிடைத்த
கௌரவம் குறித்து
பறந்து பறந்து
பரிமாறிக் கொண்டன
மகிழ்ச்சிகளை
உன்
செல்லச் சிணுங்கலுக்கு
முன்னால்
என் கவிதை
கைகட்டி வாய்பொத்துகிறது.
உன்
பூரண சௌந்தர்யம்
மலரின் வாசனை போல்
என்
எழுத்துக்குள்
மணக்க மறுக்கிறது.
உன்னைத்
தொட்டுவிடத் துடிக்கும்
என் விரல்களை
உன்
கம்பீரம் மிரட்டுகிறது.
நான்
மனந்திறக்க
முயலும் போதெல்லாம்
உன் பார்வை
அடைத்து விடுகிறது
நான்
காத்திருக்கச்
சம்மதந்தான்
ஆனால்
அடுத்த பிறவிவரை என்றால்
ஆகாது.
வா
வசந்த காலத்தை
வசந்தப் படுத்துவோம்
இல்லையெனில்
இலையுதிர் காலம்
நம்மை
ஏளனம் செய்யும்.
- வானம்பாடிக் கவிஞர் கனவுதாசன்
+91 96007 80 800
+91 97878 37 267