அபுதாபியில் அபூர்வராகம் - 3

முதல் பகுதியில் திரு. ராஜேஷ் வைத்யாவின் இசை, குழந்தைகள் நடனம், திரு. மோகன், திரு. யூகிசேது ஆகியோரின் பேச்சுக்களின் தொகுப்பை வாசிக்க...

அபூர்வராகம் -1

இரண்டாம் பகுதியில் திரு.டெல்லிகணேஷ் அவர்களின் கேபி சார் குறித்த சுவையான பேச்சின் தொகுப்பை வாசிக்க....

அபூர்வராகம் -2

************************
இனி விழாவின் முக்கிய நிகழ்வான இயக்குநர் சிகரம் பற்றி இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் பேச்சில் இருந்து தொகுப்பாய் சில...

வெள்ளை ஜீன்ஸ், வெள்ளை டீசர்ட்டில் வந்திருந்த பாரதிராஜா அவர்கள், தன்னைப் பேச அழைத்ததும் கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு மைக்கின் முன்னால் வந்தார். அவருக்கே உரித்தான கரகரப்பான குரலில் 'என் இனிய தமிழ் மக்களே..' என்று ஆரம்பித்து .'பாலசந்தர் அவர்களுக்கு வெளிநாடுகளில் முதன் முதலில் விழா எடுப்பவர்கள் அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பினர்தான்... அதற்கு நன்றி" என்றவர் சபை நாகரீகம் கருதி சில விஷயங்களைப் பேசினார்.

கேபியோட இழப்பைப் பற்றிச் சொன்னவர், அவரோட மறைவுக்குப் பின்னால எனக்கு படுத்தா தூக்கம் வரலைங்க... அவரோட நினைவுகள் போட்டு வாட்டுது. அதுக்கான காரணத்தையெல்லாம் வெளிய சொல்லமுடியாது. பா வரிசையில ரெண்டு பேரை இழந்துட்டோம்... அந்த வலி எனக்குத்தான் தெரியும் என்று வருந்தினார்.

"இங்கே மோகன் பேசியது மனசில் இருந்து வந்தது. என்னை ஐயா கைபிடித்து இனி எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார் என்றான். உண்மை... அது உண்மையான பாசம்.. கண்டிப்பாக உணருவான். இவனை மாதிரி ஒரு உதவியாளன் எனக்கு இல்லையேன்னு வருந்தியிருக்கேன். இவனை கேபியின் நிழல்ன்னு சொல்றாங்க... இவன் நிழல் இல்லை நிஜம். ராஜேஷ் என்னமா வாசிக்கிறான்ய்யா.. வாசிக்கும் போது அவன் முகத்தில் இருந்து கண்ணை அகற்றவே முடியலை... எவ்வளவு எக்ஸ்பிரசன்ஸ்.. கலக்கிட்டான்... யூகி சொல்லவே வேண்டாம்.. நிறையப் படிச்சவன்... அறிவாளி... பாருங்க... ஏதோ ஒரு காலேஜ் புரபஸர் மாதிரி பேக்கெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து பக்கம் பக்கமா எழுதிவச்சிப் பேசுறான்... உலக விஷயங்கள் எல்லாம் அறிந்தவன். விவரமான ஆள்... சினிமாவுக்காக நிறைய உழைக்கிறான். நானெல்லாம் காகிதத்தில் குறிப்பெடுத்து வந்து பேசுறேன்... ஆனா டெல்லி... நகைச்சுவையாய் எந்தவித குறிப்பும் இல்லாம சரளமாப் பேசுறார்... என்ன ஒரு பேச்சு... என்ன ஒரு தெளிவு... இவங்க நவீன நாகேஷ்ன்னு சொன்னது சரிதான்... அருமையாப் பேசினார்."

"எதிர் நீச்சல் படத்தை சைக்கிள்ல போயி பாத்துட்டு வந்து அதோட பாதிப்புல கொஞ்ச நாள் தூங்கவே இல்லை. என்ன ஒரு படம். காமெடியனா இருந்த நாகேஷ்க்கிட்ட இருந்த குணச்சித்திர நடிப்பை அழகா வெளியில கொண்டாந்திருப்பார். பாத்த வேலையை விட்டுட்டு நான் சென்னைக்கு கிளம்பினேன். இதெல்லாம் வேண்டாத வேலையின்னு எல்லோரும் சொல்ல, எங்கம்மா மட்டுந்தான் எனக்கு 200 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பி வச்சாங்க.. லாரியில ஏறி சென்னை வந்தேன். என்னோட குறிக்கோளெல்லாம் பாலசந்தர் சாரைப் பார்க்கணும்... சிவாஜியைப் பார்த்து அவரு மாதிரி நடிகராகணுங்கிறதுதான்.. அதுக்காகத்தான் சென்னை வந்தேன்..."

"ஒரு கதை எழுதிக்கிட்டு பாலசந்தர் சாரைப் பாக்கப்போனேன். அவரு இங்கிலீஸ்லதான் பேசுவாருன்னு நினைச்சேன். எனக்கு அப்ப இங்கிலீஸ் தெரியாது. அதனால ஹிந்துல வேலைபார்த்த நண்பரை துணைக்கு அழைத்துக் கொண்டு போய் பார்த்தேன். கதையைச் சொன்னதும் கை விரல்களை இப்படிச் செய்தபடி கேட்டவர் எழுந்து வெளியில் நடக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர் நான் உதவி இயக்குநராய் பலரிடம் பணி புரிந்தேன். பாலசந்தரிடம் பணி புரியவில்லை."

"நான் இயக்குநராகி 16 வயதினிலே படம் எடுத்து முடிச்சேன். முக்கியமானவங்களுக்கு படத்தை போட்டுக்காட்டும் போது கமல் கேபியை கூப்பிடுகிறேன் என்றான். எனக்குப் பயம்... அந்தாளு வருவாரா... வந்து என்னய்யா படம்ன்னு சொல்லிட்டா என்று யோசித்து அவரு வருவாரா? என்றேன். கமல் கூட்டி வந்தான். வந்து படம் பார்த்தார். நான் அவர் முகத்தில் வரும் உணர்ச்சிகளையே கவனித்துக் கொண்டிருந்தேன். இடைவேளையில் ஒன்றும் பேசாமல் வெளியே போய் வந்தார். படம் முடிந்ததும் என்னை அழைத்து 'நல்லா பண்ணியிருக்கே... நல்லா வருவே...' என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். யார் படம் என்றாலும் நன்றாக இருந்தால் வாழ்த்துவதுடன் அடுத்தநாளே கடிதம் எழுதுவார். எனக்கும் கடிதம் எழுதினார்."

"எங்களுக்குள் நட்பு இறுக்கமானது. ஒரு முறை இரவு அவருடன் நானும், நாகேஷூம் பேசிக்கொண்டிருந்தோம்.வெளியில ஒரு ரவுண்ட் பொயிட்டு வரலாம்ன்னு சொன்னப்போ நீங்க போங்க... நான் வரலை என்று சொல்லிவிட்டார். நானும் நாகேஷூம் அப்படியே நடந்து போய் நிறைய விஷயங்கள் பேசி அரட்டை அடித்துத் திரும்பினோம். நான் ரொம்ப கரடுமுரடானவன்... காடு மாதிரி.. ஒழுங்கில்லாதாவன்... ஆனா அவரு பூந்தோட்டம் மாதிரி.. அழகாச் செதுக்கி செதுக்கி வாழ்ந்தவர். இதை பலமுறை அவரிடம் சொல்லியிருக்கேன்... பெரும்பாலும் இது போன்ற அரட்டைகளைத் தவிர்த்து விடுவார்."

"அவரோட அவள் ஒரு தொடர்கதை படம் வெளியானதும் பார்த்துட்டு ஒவ்வொரு சீன் குறித்தும் விரிவாக கடிதம் எழுதினேன்... சில வருடங்களுக்கு முன் அவர் வீட்டுக்குப் போனபோது உங்களுக்கு நான் எழுதிய கடிதம் ஞாபகம் இருக்கா... இன்னும் இருக்கிறதா என்றேன். இருக்கு காட்டவா என்றார். அதுதான் கேபி. பத்திரமாக வைத்திருப்பார். எனக்கு அவர் எழுதிய கடிதமும் பத்திரமாக இருக்கு."

"சபையில் சொல்லக்கூடாதுதான் இருந்தும் சொல்றேன்... என்னை அவர் எப்போதும் தேவரே என்றுதான் அழைப்பார். நான் அவரை ஐயரே என்றுதான் சொல்லுவேன். பதினைந்து வருசத்துக்கு முன்னர் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் போது நான் முன்னாலயின்னா நீதான் தேவரே என்னைத் தூக்கணும் அதே மாதிரி நீ முன்னாலயின்னா நான் வந்து தூக்குவேன் என்றார். நான் உடனே ஐயரே, நான் முன்னாலயின்னா நீங்க வந்தா எங்க பயலுக கரடுமுரடானவனுங்க ஏதாச்சும் சொல்லுவானுங்க.. ஆனா உங்க ஆளுங்க ரொம்ப நல்லவங்க என்னை ஒண்ணும் சொல்லமாட்டாங்கன்னு சொல்லிச் சிரித்தேன்."

"அவரின் குசேலன் படவிழா...எல்லோரையும் மேடைக்கு அழைத்தார்கள்... நான் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். எனக்கு ஒரே நண்பன் பாரதி, பாரதி நீ மேடைக்கு வா என்று என்னை மேடையேற்றிய பெருந்தன்மைக்காரன் அவர். சக கலைஞரை மதிக்கத் தெரிந்தவர்.... இன்று அவனா எப்போ ஒழிவான் என்றுதான் காத்திருக்கிறார்கள். ஆனால் என்னை என்னோட நண்பன் என்று சொல்லி மேடையேற்றியவர் அவர்."

"இங்கு நடனமாடிய குழந்தைகள் என்ன அழகாக வெஸ்டர்னையும் கிளாஸிக்கையும் கலந்து ஆடினார்கள். காஸ்ட்யூம்ஸ் சூப்பர். அவங்களுக்கு நடனம் அமைத்தவரை எப்படிப் பாராட்டுவது. பாரதி நட்புக்காக அமைப்பினர் எவ்வளவு சிரத்தையுடன் இந்த நிகழ்ச்சியை அமைத்திருக்கிறார்கள். பாரதி நட்புக்காக விழாவில் நான் கலந்து கொள்வது மூன்றாவது முறை, என்னைத் தம்பி முனி... அழைத்தபோது... முனியப்பனை நான் முனி என்றுதான் கூப்பிடுவேன். பாலசந்தருக்கான விழா என்றதும் உடனே சரியென்றேன். கடல் கடந்து அந்த மனிதருக்கு நடக்கும் முதல் நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்."

"மனோகரா, சின்னப்பான்னு எத்தனையோ நாடக்குழு அப்போ நாடகம் போடுறதுல பிரபலமா இருந்தாங்க., மனோகராவெல்லாம் சீன் செட்டிங்குன்னு பிரமாண்டமாக இருக்கும். எம்.ஆர்.ராதா ஒரு ஸ்கிரீனைக் கட்டிட்டு நாடகம் போட்டுருவாரு.... அந்தக் காலத்துல நாடகத்துக்கு ஹவுஸ்புல் போர்டு போட்டு நடத்துன ஒரே ஆள் பாலசந்தர்.. ராஜா அண்ணாமலை மன்றத்துல நீர்க்குமிழி நாடகம், ஹவுஸ்புல்.. டிக்கெட் வாங்கிட்டும் ரொம்ப பேர் இடமில்லாம நின்னுக்கிட்டு பாத்தாங்க. அப்ப பிளாக் டிக்கெட் இருந்தாக்கூட வாங்கியிருப்பேன். ஹவுஸ்புல்லுன்னாலும் எனக்கு அங்கு வேலை பார்க்கும் ஒருத்தனைத் தெரியும் என்பதால் அவனிடம் கேட்டு நின்று கொண்டே பார்த்தவர்களில் நானும் நின்றே அந்த நாடகத்தை கடைசிவரை பார்த்துத் திரும்பினேன். என்ன ஒரு நாடகம்.. எல்லாருடைய நாடகத்துக்கும் கூட்டம் வரும் என்றாலும் ஹவுஸ்புல் போட்டு நாடகம் நடத்திய ஒரே ஆள் கேபிதான்..."

"டெல்லி எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு... உன்னைய கூப்பிடலையேன்னு நினைக்காதே ஏனோ தோணலை... நீ அருமையான நடிகன்... ஆனா நீ சொன்னமாதிரி இறைவன் என்ன நினைக்கிறானோ அதன்படி தானே நடக்கும். எனக்கு மனோரமாவை நான் அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கும் போதே தெரியும். ஆனா அவங்களையும் இதுவரை நடிக்க கூப்பிடலை. அந்தம்மா பாக்குற நேரமெல்லாம் பாரதி எங்களை எல்லாம் உங்களுக்குத் தெரியாதேன்னு சொல்லும். ஆனா என்னன்னே தெரியலை... கூப்பிடத் தோணலை. இவ்வளவு ஏன் சிவக்குமார் எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு.. தினம் பேசுவோம். அப்ப சூர்யாவெல்லாம் சின்ன பசங்க... எங்க வீட்டுப்பிள்ளைங்களும் அவங்களும் விளையாடுவாங்க... 20 வருசப் பழக்கம்... ஏனோ சிவக்குமாரை நடிக்கிறியான்னு கேக்கத் தோணலை... பசும்பொன் கதை அவனுக்கு சரியா இருப்பதாகத் தோண, அவனுக்கிட்ட போயி கேட்டேன். இத்தனை வருசத்துக்கு அப்புறம் இப்பத்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கு என்றவன் நடிக்க மாட்டேன் என்றிருந்த தன்னோட விரதத்தை எனக்காக முடித்துக் கொண்டு நடித்தான். டெல்லி நீ சொன்ன மாதிரி 'Gods almighty'தான் இதுக்கெல்லாம் காரணம் என்றார்.

"இந்த வாழ்க்கையில் எல்லாம் சேர்த்தாச்சு... இந்த வீடு, கார் எதுவுமே நம்மது இல்லை... எல்லாத்தையும் சேர்த்துட்டு எதையும் எடுத்துக்கிட்டுப் போகப்போவதில்லை. நாம இங்க வாழ்ந்ததுக்கு அடையாளமாக படைப்பை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். ஒரு விதையை விதைத்துவிட்டுச் செல்ல வேண்டும். நாம் மறைந்தாலும் அது பேசிக்கொண்டிருக்கும். ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும் அதைக் கண்டுபிடித்து அந்தப் படைப்பை நாம் வாழ்ந்த உலகுக்கு விட்டுச் செல்ல வேண்டும். எங்க வீட்ல ஆறு பேர்ல எல்லாருக்கும் இறைவன் வாய்ப்புக் கொடுத்தானா என்றால் இல்லையே... எனக்கு அந்த வாய்ப்பை கடவுள் கொடுத்தான். வாழும் வரை அடுத்தவனை எப்படிக் கெடுக்கலாம்... அவன் எப்படி நல்லாயிருக்கலாம் என்று நினைக்காமல் நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக எதாவது படைப்பை விட்டுச் செல்ல வேண்டும். கேபி விட்டுச் சென்றிருக்கிறார். அவர் மறைந்ததாக நான் நினைக்கவேயில்லை."

"அவர் உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்காருன்னு மோகன் போன் பண்ணியதும் அங்கே போனேன். புஷ்பா பாரதி வந்திருக்கார்ன்னு சொன்னுச்சு... கண்ணே திறக்கலை... பாரதி வந்திருக்கேன்னு சொன்னேன்... ரொம்ப நேரம் கழிச்சி மெதுவாக கண்ணைத் திறந்து என்னைப் பார்த்து 'பாபாபா...ர.....தி....ரா...ஜா' என்றார். தண்ணி கேட்டாரு.. உடனே புஷ்பா தண்ணியை எடுத்து எங்கையில கொடுக்க நான் அவருக்கு கொடுத்தேன்... குடிச்சாருய்யா... அதுதான் அவராக் குடிச்ச கடைசித் தண்ணீர்... அதுக்கப்புறம் அவரு தண்ணியே குடிக்கலையாம்... ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சம் ஊற்றினார்களாம் மோகன் சொன்னான். அந்த மனுசனுக்கு நான்தான் கடைசித் தண்ணீர் கொடுத்தேன்யா..." என்றபோது குரல் கம்மி தழுதழுத்தார்.

"அவர் இறந்துட்டாருன்னு செய்தி வந்தபோது நான் இலங்கையில் இருந்தேன். ஸப்னாவில் இருக்கும் போதுதான் மோகன் போன் பண்ணினான். அப்போ அங்கே சரியான மழை... வெள்ளக்காடா இருந்துச்சு... இந்த மழையில போகவே முடியாதுன்னு சொன்னாங்க... எப்படியாச்சும் நான் உடனே போயாகணும் என்று சொல்லிவிட்டேன். பிறகு ஏற்பாடு பண்ணி கிட்டத்தட்ட மூண்றரைக் கிலோமீட்டர் தண்ணிக்குள்ளயே காரை படகு மாதிரி ஓட்டிக் கொண்டு வந்து என்னை ஏர்போர்ட்டில் கொண்டு வந்து விட்டார்கள். நீ செத்தா நான் தூக்குவேன்யான்னு சொன்னதை நிறைவேற்ற வேண்டும் எனத் தவித்தேன்... அவரிடம் சொன்னது போல் அவரை நான் என் தோளில் தூக்கினேன்...."

மீண்டும் திரு. யூகிசேது, திரு. மோகன், திரு. ராஜேஷ் வைத்யா பற்றி பேசும் போது ஒரு மேடையில் பாரதி என்னைவிட சின்னவனாப் பொயிட்டான்... இல்லைன்னா அவன் கால்ல விழுந்திருப்பேன்னு கே.பி. சொன்னாருய்யா... அது மாதிரி தம்பி ராஜேஷ் வயசில் சின்னவனாப் பொயிட்டான். இல்லேன்னா அவனோட கால்ல விழுந்திருப்பேன். என்னமா வாசிக்கிறான்... 'hats of you' என்றார்.

"என்னையைப் பொறுத்தவரை மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி சொல்லிவிடுவேன். அதுவே பல நேரம் பிரச்சினை ஆகிவிடுகிறது. அதற்காக வருத்தப்படுவதில்லை.... புகழ் ஒரு போதை... அதை தலைக்கு ஏற்றாதீர்கள். மனதில் உள்ளதைப் பேசுங்கள்... இந்த வாழ்க்கையை இங்கு வாழ்ந்ததன் அடையாளமாக எதையாவது அழுத்தமாகப் பதிந்து செல்லுங்கள். இப்படித்தான் ஒருத்தன்கிட்ட புகழைத் தூக்கி தலையில வச்சிக்காதே... கக்கத்துல வச்சிக்கன்னு சொன்னேன்... மேடையிலிருந்து இறங்கிப் பொயிட்டான்ய்யா... " என்றார்.

பாரதிராஜா பேச ஆரம்பிக்கும் போது 10 மணிக்கு மேலாகிவிட்டதால் அரங்கம் மெல்லக் காலியாக ஆரம்பித்து அவர் முடிக்கும் போது பாதி அரங்கத்துக்கு மேல் காலியாகிவிட்டது. தனக்கும் பாலசந்தருக்குமான நட்பை அவருக்கே உரிய பாணியில் ஒளிவு மறைவின்றி அழுத்தமாக இந்த விழாவில் பகிர்ந்தார். அதன் பின்னர் நன்றியுரை வழங்கி, நாட்டுப் பண் இசைக்க விழா சிறப்பாக நடந்து முடிந்தது.


மனசின் துளிகள் சில :

* திரு. கேபி அவர்களுக்கு பாராட்டு விழா எடுத்த பாரதி நட்புக்காக அமைப்பு அவரின் நினைவைப் போற்றும் விதமாக வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புகளில் முன்னோடியாக இந்த அபூர்வராகம் நிகழ்ச்சியை நடத்தியது. எளிமை... இனிமை.. புதுமை.. என்று சொல்லும் இவர்கள் மிகச் சிறப்பான ஆட்களை வரவழைத்து கேபிக்கு மரியாதை செலுத்தி அந்தக் கலைஞனின் ஆத்மாவிற்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்... அதற்காக வாழ்த்துவோம்.

* அலைனில் இருந்ததால் இந்த முறை விழாவுக்குச் செல்லும் எண்ணமில்லை... அப்படியிருந்தும் என்னை நீ கண்டிப்பாக வர்றே என்று அன்போடு அழைத்த அண்ணன் சுபஹான் அவர்கள் திரு.கலீல் ரஹ்மான் அவர்களுடன் அறிமுகம் செய்து வைத்தார். விழா மேடையில் அவருக்கு அழைப்பு வர, கை கொடுத்து எப்படியிருக்கீங்க என்றதுடன் அவசரமாக மேடையேறியவர் ஞாயிறன்று எனது மொபைல் நம்பர் வாங்கி போன் செய்து பேச முடியாமல் போனதற்கு வருத்தப்பட்டார். மேன்மக்கள் மேன்மக்களே...

* மேடையில் அமைப்பின் முந்தைய விழாச் செயல்பாடுகளை திரையில் காட்டுவதோடு மட்டுமில்லாமல் விழாவின் ஆரம்பத்தில் இந்த ஆண்டில் பாரதி என்ன செய்தது என்று ஆண்டறிக்கை போன்று ஒன்றை வாசிக்கலாமே. அனைவரும் அறிந்து கொள்ள உதவுமே. இல்லை என்றால் வருடம் ஒருமுறை திரைத்துறை சம்பந்தப்பட்டவர்களை மட்டுமே வைத்து விழா எடுப்பார்க்களே அந்த அமைப்பா என்ற நிலையில்தான் பெயர் இருக்கும்.

* கேபியின் உதவியாளர் திரு. மோகன் அவர்கள் மேடையில் ஏற்றப்பட்டு கௌரவிக்கப்பட்டு உடனே பேச அழைக்கப்பட்டு, பேசியதும் கீழிறங்கிவிட்டார். அவரை மேடையில் அமர வைக்கவில்லை. மேடையில் அவருக்கும் ஒரு நாற்காலி போட்டு அமர வைத்திருக்கலாமே என்று தோன்றியது. இருப்பினும் அவர் பேசியதை வைத்துப் பார்க்கும் போது ஜாம்பவான்களின் மத்தியில் சாமானியன் அமர்வதா என்று அவர் மறுத்திருப்பாரோ என்றும் தோன்றியது.

* திரு. ராஜேஷ் வைத்யா அவர்கள் கௌரவிக்கப்பட்டபோது மிகவும் அழகாக, ராஜேஷின் வீணைக்கு பக்கபலமாக இசை வார்த்த அவரின் இசைக் குழுவினர் நால்வரையும் கௌரவித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை.. இவ்வளவு செலவு செய்தவர்கள் அதில் ஏன் கவனம் கொள்ளவில்லை.

* விழா 6.45க்கு ஆரம்பித்ததற்குப் பதில் 6 மணிக்கு ஆரம்பித்திருந்தால் திரு. பாரதிராஜா பேசும் போது கூட்டம் அப்படியேஇருந்திருக்கும் அவரும் நமக்கு இன்னும் விருந்தளித்திருப்பார். திரு. யூகி சேது அவர்களின் ஆழமான பேச்சையும் திரு. டெல்லி கணேஷ் அவர்களின் நகைச்சுவையான பேச்சையும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசித்திருக்கலாம். திரு. பாரதிராஜா அவர்களும் இன்னும் பேசியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 மணிக்கே ஆரம்பிக்க தயாராய் இருந்தும் ஒரு சில நடைமுறைச் சிக்கலால் 6.45க்கு ஆரம்பித்ததாகச் சொன்னார்கள். அது உண்மைதான் நடைமுறைச் சிக்கல் என்பது நாட்டில் மட்டும்தான் என்றில்லை அல்லவா?

நன்றி.

எனது எழுத்தையும் விரும்பி என்னை ஊக்குவிக்கும் பாரதி நட்புக்காக அமைப்பு நண்பர்களுக்கு இந்த மூன்று பகிர்வும் சமர்ப்பணம்.

-:முற்றும்:-

படங்கள் உதவி : திரு. சுபஹான் அண்ணன் அவர்க்களுக்கு நன்றி.

இத்தனை வருட எழுத்தில் முதல் முறையாக தமிழின் முன்னணி பதிவர்கள் வரிசையில் ஒற்றை இலக்கத்தில் (9 வது இடம்) அளித்த தமிழ்மணத்துக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (17-Feb-15, 10:18 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 145

புதிய படைப்புகள்

மேலே