நித்ய யாசகன்

பஞ்ச பூத கவிதை வரிசையில் - நிலம்


ஒரு விடியலில்
பாதையினில் தனித்த பயணம் தொடர்கிறது.
பிரதிபலிப்பில் நிழல் விழுந்த நிலம்
'என்னைத் தெரிகிறதா’
எனப் பேசத் தொடங்குகிறது.
‘ஆமாம், நான் தான் நீ' என்கிறது.
வினாக்கள் விழி அசைவுகளை நிறுத்தி வைக்கின்றன..
முன்னொரு தினத்தில்
நீ எருவாக இருந்தாய்,
பின் விதையானாய்,
பின் மரம் ஆனானாய்,
‘பூவானாய், காயானாய், கனியானாய்,
பின் மாண்டு எருவானாய்’ என்கிறது.
படைப்பின் நோக்கம் குறித்து வினவுகிறேன்.
'படைப்புகள் படைத்தவனுக்கு மட்டுமே சொந்தம்'
எனும் பதில் வருகிறது.
படைப்புகளின் நேர்த்தியும், நேர்த்தியின்மை குறித்தும்
கேள்விகள் எழுகின்றன.
'காலங்களுக்கு கட்டுப்பட்டது தானே
அனைத்து பிரபஞ்சங்களும் அதன் உட்பொருள்களும்'
என்றாய் பதில் வருகிறது.
சுழற்சியின் காலம் பற்றி வினவுகிறேன்.
'நீயும் நானும் ஒன்று எனில்
காலம் குறித்து என்ன சொல்லமுடியும்' என்கிறது.
முன்னே தவழ்ந்து செல்லும் குழந்தை ஒன்று
தன் கைகளால் நிலம் கீறி எழுதிச் செல்கிறது
'ஓம் சிவோகம்'.

எழுதியவர் : அரிஷ்டநேமி (26-Feb-15, 8:37 am)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 93

மேலே