பறவை கூட்டம்
மாலை பொழுதின் மந்தாரத்தில்
வானிலும் ஏதோ கூட்டம்
மனதை திருடிச் செல்லும்
பொல்லாத பறவைகள் பேரணி
ஆசை தீர அணைக்கும்
காற்றோடு என்ன கோபமோ...
சொந்தங்களோடு சல்லாபம் செய்கிறது
சிறகுகள் வலிக்க போராட்டமோ...!
களஞ்சியத்தில் சிதறிய நெல்மணியாய்...
சோலை நிறைந்த புஷ்பங்களாய்...
தாடகத்தை ஆளும் ஆம்பலாய்...
முகிலில் பதிந்த புட்கள்...!
மேகங்களில் மறைந்த பிறைமதியென
சிறகடித்த கல்லூரிகாலம் மறைந்திட...
நினைவை கலைத்த களிப்பில்
கூக்குரலிட்டு போகுது புள்ளினம்...!
சிட்டுக்குருவி தேன் சிதறிட
சிறகென விரிந்தது சிந்தை...
அன்றில் இனமாய் மனம்
காற்றோடு காதல் கொண்டது...!