56 பணி நிறைவு பெற்றேன்

ஊரில் எனக்கொரு மதிப்பைத் தந்ததும்,
*** உற்றார் உறவினர் மத்தியில்
பேரைத் தந்ததும், பிழைப்பைத் தந்ததும்,
*** பெரிய மனிதரும் வணங்கிடும்
சீரைத் தந்ததும், சிறப்பைத் தந்ததும்,
*** செல்வ வளர்ச்சியைத் தந்ததும்,
பாரில் நல்லதோர் மனைவி தந்ததும்,
*** பழகும் வட்டங்கள் தந்ததும்,

உடன்பி றந்தவர் படிக்க வைத்ததும்,
*** உற்ற தந்தைநோய் தீர்த்ததும்,
கடனும் உடனுமாய்த் தங்கை மார்களைக்
*** கட்டிக் கொடுத்ததும் காத்ததும்,
உடைமை யாகவே வீடு வாகனம்
*** உரொக்கம் நகைகளைச் சேர்த்ததும்,
பிடியில் சேர்மரு மகன்கள் வந்ததும்,
*** பேரன் பேத்திகள் எடுத்ததும்,

இந்த வேலையால் தானே? இறைவனே!
*** இதனை இன்றுடன் முடிக்கிறேன்!
முந்தும் உணர்ச்சிகள் முட்டிச் சூழ்ந்தெனை
*** மூழ்க டிக்குதே வெள்ளமாய்!
இன்ப அதிர்ச்சியும் துன்ப அதிர்ச்சியும்
*** என்னைக் கௌவுதே மௌனமாய்!
என்ன சொல்லுவேன்? என்ன செய்குவேன்?
*** இதயம் அடிக்குதே சன்னமாய்!

அரசுத் துறையிலே அறிவு, செயல்திறன்,
*** அகவை, அனுபவம் எதற்குமே
உரிய மதிப்பிலை; உழைப்பிற் குயர்விலை;
*** உளைந்து சாவதில் பயனிலை!
பெரிய துரையையும் சிறிய வேலையாள்
***பெயரைச் சொல்லியே மிரட்டுவான்!
நரிகள் போன்றவர் நயக்கும் துறையது;
*** நமக்குச் சரிப்பட வில்லையே!

எனக்கொர் திறமையை இறைவன் நல்கினான்
*** இனிய கவிதைகள் புனைவது!
மனத்துள் இதனைநான் வைத்து மறுகியே
*** வாழ்க்கை இதுவரை கழிந்தது!
அனைத்தும் அறிந்தவா! குடத்து விளக்கினை
*** அகிலம் அறியவே ஏற்றுவாய்!
இனிக்கும் தீந்தமிழ் மணக்கும் பூந்தமிழ்
*** என்னை ஆளவே மாற்றுவாய்!


- ராஜமாணிக்கம்

எழுதியவர் : ராஜமாணிக்கம் (1-Mar-15, 9:51 am)
சேர்த்தது : டோனி கிறிஸ்டோபர் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 505

மேலே