கவிதை செய்யும் மாயம்

உள்ள வலியை உரக்க உரைத்திடும்
தள்ளுந் துயரைத் தடுத்திடும் -துள்ளலுடன்
காதலும் பேசும் கவினழகு பாடிடும்
மோதலுஞ் செய்யும் முனைந்து .

இதய மொழிதனை இங்கிதமாய்க் கூறும்
மதமா னமனதை மாற்றும் - பதமா
யுணர்த்து மிடித்து முரைக்கு மெழுத்தில்
வரையுங் கவிதை வனப்பு .

உதிரங் கலந்த உணர்வு கவிதை
புதிதாய் அனுதினம் பூக்கும் - நதியாய்
வளைந்து நெளிந்து வளமும் பெருக்கும்
களையாய்த் திகழுங் கவி .

கவிதை தினத்தினில் காதலுங் கொண்டே
குவித்தேன் கவிமலர்க் கோலம் - கவிதையே !
நெஞ்சம் நிறைந்தாய் நெகிழ்ந்துனைப் போற்றுவேன்
தஞ்சமென் றென்மனந் தங்கு

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Mar-15, 1:55 pm)
பார்வை : 1116

மேலே