இதயக் காதலன்

காலையில் எழுந்த சுந்தருக்கு உடம்பு வலித்தது கூடவே நெஞ்சும் வலித்தது. நேற்று மாலை வரையிலும் 'அத்தான், அத்தான்' என உருகின சுதா, ஒரு நொடியில் காதல் கோட்டையைத் தகர்த்து விடுவாள் என கொஞ்சங்கூட அவன் எதிர்பாா்க்கவில்லை. அந்த சம்பவத்தை நினைத்தாலே அவனுக்கு தொண்டையடைத்தது. "எனக்கு வேலை கிடைத்து விட்டது; என்னுடைய தங்கையையும் தம்பியையும் நல்ல முறையில் கரையேற்ற வேண்டும் ;உங்களுக்கு வேலையில்லை; நல்ல வேலையாக தேடிக்கொள்ளுங்கள்; மனம் நிறைந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்" எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டாள் அவள்தான் என்னுடைய மனம் நிறைந்த பெண் என்பது அவளுக்குத் தெரியாதா? கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி எழுந்தான்.
சூரியன் உதிக்கிறது மறைகிறது அதற்கு எதைக் குறித்தும் கவலையில்லை. பணக்காரன் பணத்தை எப்படி செலவழிக்கலாம் என்று திட்டமிடும்போது, ஏழையோ எப்படி வயிற்றைக் கழுவலாம் என்று ஏங்குகின்றான், அதுபோல நோயால் தவிப்பவர்களுக்கு மட்டும் தான் அந்த வேதனை தெரியுமே தவிர பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது புாியாது, என மனதில் நினைத்தபடியே புகைவண்டியில் பயணம் செய்த சுதா சுந்தரை நினைத்துப்பார்த்தாள். எப்படி நொந்து போயிருப்பான். என்மேல் உயிரையே வைத்திருக்கும் அத்தான் சுந்தருக்கு எனக்கு இதய நோய் இருப்பது தெரிந்திருந்தால் துடித்து போயிருப்பான், உயிரை விட்டாலும் விடுவான் அந்த நிலைமைக்கு வந்துவிடக்கூடாது என்று நினைத்துதான் அவனை வெறுப்பதுபோல் பேசினாள். நம்பியிருப்பான். இப்பொழுது என்ன பாடுபடுகிறானோ ?நினைத்தவளுக்கு வேதனையாக இருந்தது.
மருத்துவமனைக்கு வந்து ஐந்து நாட்களாயிற்று. இன்னும் ஒருசில நாட்களில் ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆபரேஷன் முடிய குறைந்தது எட்டு மணிநேரமாகும், மருத்துவர் சொல்லிவிட்டாா். உயிருக்கும் உத்தரவாதமில்லை. எண்ணியபடியே கிடந்தவள் மனதிலே சொல்லிக் கொண்டாள், 'வௌிப்படையாக இல்லாவிட்டாலும் அந்தரங்கமாக சொல்கிறேன் என் கணவர் சுந்தர்தான் நான் இறந்தாலும் சுமங்கலியாகவே இறக்கிறேன்' அந்த வாா்த்தை தந்த சுகத்தில் சுதாவிற்கு உடம்பு ஒருமுறை சிலிர்த்துக்கொண்டது.
காலை முதலே சுந்தருக்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. சுதா சொன்னது மட்டுமே மீண்டும் மீண்டும் மனதில் வந்தது. நினைத்ததும் மனது நிலை கொள்ளாமல் சாலையில் நடக்கத் தொடங்கினான். வாகனங்கள் ஓடுவது தலைகீழாக தெரிந்தது. தெருவில் சுதாவையே நினைத்தபடி நடந்தவனுக்கு சாலையின் மறுபுறத்தில் வந்த பெண் சுதாவாக தெரிந்தாள். "சுதா" என கத்தியபடி சாலையைக் கடக்க முயன்றவனை அருகில் வந்த வாகனம் முத்தமிட்டு சென்றது. 'இந்த ஜென்மத்தில் எனக்கு மனைவி என்று ஒருத்தி இருந்தால் அது சுதா மட்டும் தான் நடக்குமா?' நினைத்தவன் நடந்ததை புரிந்து கொள்வதற்குள் நினைவிழந்தான்.
மருத்துவமனையில் தங்களுடைய ஒரே மகன் அணுஅணுவாக செத்துக் கொண்டிருப்பதை கண்ட பெற்றோருக்கு ஒரு எண்ணம் உதித்தது, அவனது கண்களையும், இதயத்தையும், தேவைப்பட்ட உறுப்புகளையும் தானம் செய்யலாம், அதன் வாயிலாக மகனைப் பார்க்கலாம் என்ற அவர்களது முடிவு மருத்துவர்களுக்குச் சோகத்தின் மத்தியிலும் ஆறுதலளித்தது.
பெரும்பாலான உறுப்புக்கள் தேவைப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டன. இறுதியாக இருதயம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுதாவிற்கு பொருத்தப்பட்டது. சுதா கண் விழித்தாள். மனதில் நினைத்துக்கொண்டாள் ,இதயத்தை தந்தவருக்கு இதயம் நிறைந்த நன்றியை சொல்ல வேண்டும். அதற்குமுன் சுந்தரைப் பார்த்து உண்மையை சொல்லிவிட வேண்டும்.
சுகம் பெற்று வந்தவள், சுந்தரை தரிசிக்க வந்தாள். வந்து சோ்வதற்குள், எத்தனை கற்பனைகள் ஏறக்குறைய திருமணம் முடிந்த மகிழ்ச்சி தான். ஆனால் அம்மகிழ்ச்சி சிலமணி நேரங்கள்தான் என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. கற்பனையோடு வந்தவளுக்கு கல்லறையே காத்திருந்தது கதறித் துடித்தவள் சுந்தரின் இதயத்தை சுமந்தபடி தனியாய் வாழத் திரும்பினாள்.