பேச்சு
சிலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
சிலபேர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்
மேடையில் பேசுவதையோ
கோபத்தில் பேசுவதையோ
கூறவில்லை நான்
நேருக்குநேராகப் பேசுவதை...
சுதிபிசகாத தாள கதியாய்
‘ஊம்’ கொட்டுகிறார்கள்
கேட்கிறார்களா ?
கேட்பது போல் முகத்தைப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்களா ?
கவிஞர் சித.சிதம்பரமும்
இப்படித்தான் ‘ஊம்’ கொட்டுவார்
அரைமணி , ஒருமணி நேரம்
யார் பேசினாலும்
கேட்டுக் கொண்டிருப்பார்
குப்பைக் கூடையில்
கொட்டுவதைப் போல
அவரிடம் கொட்டி விடலாம் .
அண்ணன் பழ.கருப்பையா
மேடையில் மட்டுமல்ல
நேரிலும் , அவர் தான் பேசுவார் .
கவிஞர் சித.சிதம்பரம்
மரணப்படுக்கையில் இருந்த போது
நான் , அண்ணன் பழ.கருப்பையா
‘காரைக்குடி’ நாராயணன்
சென்ற போதும் பேசவில்லை
அண்ணன் பழ.கரு பேசினார்
நாங்களும் பேசினோம்
ஆனால் கவிஞர் சித பேசவில்லை
அப்போதும் கேட்டுக்கொண்டிருந்தார்
ஏன் பேசவில்லை
என்ன பேசி என்ன என்றா ?
பேசுவதற்கு ஒன்றுமே இல்லையா ?
அவரை எப்படி
இனிமேல் கேட்பது ?