என்னை விட்டு போகாதே பகுதி 24

சில மணித்துளிகளுக்கு பேச மறந்து அழுகையை மட்டுமே தனக்கு சொந்தமாக்கி கொண்டாள் அவள். அவனால் அழுதிடவும் முடியவில்லை. மௌனமாகி போனான்.

"அவள் மீது நீ காதல் கொள்ள காரணம் நான் உன் மீது அன்பினை காட்ட மறந்து போனதன் விளைவா? இல்லை உன்னை நான் அதிகம் காயப்படுத்தியதற்கு நீ எனக்கு தரும் தண்டனை இந்த பிரிவா?" கேட்டாள் அவள்.

"இல்லை தேவி. உன் மீது எந்த வித வருத்தமும் இல்லை எனக்கு. உனது பிரிவால் துவண்டு போயிருந்த என் மனதிற்கு காதலின் அர்த்தம் சொல்லி தந்தவள் அவள். என் தாய் போல் அவள் என் மீது காட்டிய அன்பு மட்டுமே நான் அவள் மீது காதல் கொள்ள காரணம். அவளை அன்றி ஒரு பெண்ணை நான் மணப்பது என்பது சாத்தியம் ஆகாது" உறுதியாய் சொன்னான் அவன்.

எதையோ சிந்தித்தவளாய் "கண்ணா. உனக்கு அவள் தான் என்று நீ நினைத்தாள் அதை தடுப்பதற்கு நான் யார். உன் காதலை ஏற்க மறுத்த எனக்கு இந்த வலி வேண்டியது தான். கவியரசி கொடுத்து வைத்தவள்" என்றாள்.

அவளை பார்க்கும் துணிவு அவனிடம் இல்லை. அவள் அவன் அருகில் வந்து அவனை அணைத்து கொண்டாள். சில நிமிடங்களுக்கு அவன் தோள்களில் சாய்ந்து இருந்தவள் அவனை விட்டு விலகி சென்று "இது போதும் எனக்கு. என்னை பற்றி நீ கவலை கொள்ளாதே. கவியிடம் உன் காதலை சொல்லிவிட்டாயா?" கேட்டாள் அவள்.

ஏதோ ஒரு சுமையை இறக்கி வைத்து விட்ட உணர்வில் இருந்தவனை அந்த கேள்வி மீண்டும் சுயநினைவிற்கு கொண்டு வந்தது. "இல்லை தேவி. நாளை தான் சொல்ல போகிறேன்" என்றான் அவன். அவனது மனம் கவியின் மனதில் இருப்பதை அறியாதே.

சரி கண்ணா. உன் காதல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்று சொல்லிவிட்டு விலகி சென்றவளை பார்த்தவண்ணம் இருந்தான் அவன். அவளை காயப்படுத்திய உணர்வு இருந்தும், மனதில் ஒரு வித நிம்மதியோடு அவனும் கவியும் வழக்கமாய் அமரும் அந்த மேடையின் மீது சென்று அமர்ந்தான்.

"நாளை இதே மேடையில் நானும் கவியும் அமர்ந்திருப்போம். மரங்களே, நீங்கள் கவலை பட வேண்டாம். இனியும் அவளிடம் நான் என் காதலை மறைக்க போவதில்லை. நாளை உங்கள் முன்பு அவளிடம் நான் என் காதலை சொல்ல போகிறேன்" பித்து பிடித்தவன் போல் மரங்களிடம் உரையாடினான் அவன்.

அவனும் அவளும் திருமண மேடையில் அமர போகும் நாளை எண்ணி பார்த்தவன் இதழ்களில் தோன்றியது புன்னகை. அவன் தன்னை மறந்து அவளது நினைவில் ஆழ்ந்துவிட்டிருந்தான்.

அதே நேரம் விடுதியில் கவிக்கும் மலருக்குமான உரையாடல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. "என்ன முடிவு செய்திருக்கிறாய் கவி?" அக்கறையோடு கேட்டாள் மலர்.

"என்ன முடிவு எடுப்பது. என் மனதை எவரோ ஓங்கி அறைந்தது போன்று உணர்கிறேன். யாரும் இல்லாது தனிமையில் விடப்பட்ட மழலை போல இருக்கிறேன். என் மனதோடு இருக்கும் வலியின் அளவை என்னால் சொல்லிட முடியாது. உனக்கு அது புரியும் என்றே நினைக்கிறேன்" என்றவளின் கண்ணீர் மட்டும் வற்றவில்லை.

வலிகளை தாங்கும் உள்ளத்தின் ஒற்றை ஆறுதல் விழிகள் வடிக்கும் கண்ணீர் மட்டுமே. அவளும் அதையே தான் நாடி இருந்தாள் ஆறுதலுக்காக.

"இப்படியே சொல்லி கொண்டிருக்க முடியுமா? நீயாக எந்த முடிவையும் எடுக்காதே. அவனிடம் ஒரு முறை பேசி பார். அவன் மனதிலும் உன் மீது காதல் இருக்கலாம் அல்லவா?" என்ற மலரின் வார்த்தைகள் அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

"பேசுவதில் என்ன பயன்? அவனை நான் நன்கு அறிவேன்" உறுதியாய் சொன்னாள் அவள். பாவம் அவனது மனதை சரியாய் படிக்க முடியாத அவளது இயலாமையை அவளது மனம் அறியவில்லை.

"எனக்காக ஒரு முறை பேசி பார்" என்று மலர் சொல்லி கொண்டிருக்க கவியரசியின் கைபேசி சிணுங்கியது. அழைத்தது அவளது தந்தை. அழைப்பை ஏற்றவள் சில மணி துளிகளுக்கு மௌனமாய் தலை அசைத்தபடி அவளது தந்தை கூறியதை கேட்டு கொண்டிருந்தாள்.

பின் சரி என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவள் மலரின் கேள்விக்கு பதில் சொல்பவளாய் "நாளை எங்களது சந்திப்பில் இது அத்தனைக்கும் ஒரு முடிவு பிறந்து விடும்" என்றாள்.

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (7-Apr-15, 5:29 am)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 301

மேலே