மழையென்பது யாதென -சர் நா

நனைந்தவனால் வியர்த்த
அவளுக்கும்
வியர்த்தவளால் நனைந்த
அவனுக்கும்
காதலுமானது.

சாமத்தில் பெய்து
கொண்டிருந்த
நெடுநாளாகிப் போன
தலைவன் தலைவியின்
கூடலில் காமமுமானது.

குழந்தையின் வீட்டுப்பாட
பயத்தினுள் வானவில்லென
விடுமுறைக்குப்
பெய்துபின் பொய்த்தபோது
மத்தாப்புமானது.

சாகுபடிக் கணக்குகளை
நிறைத்தோடி சந்தோசப்படுத்தி
நீர்நிலைகளில் வழிந்தபோது
ஆதாரமுமானது.

விளைச்சலைச் சூறையாடியது
வாரச்சந்தை ரத்து
ரோட்டுக் கடைகளை மூடியதென
சேதாரமுமானது.

ஆளில்லாப் பெருவெளியில்
தடையில்லாது சடச் சடக்க
அங்கெங்கும் துளித் துளியாய்
அமானுஷ்யமுமானது.

விளையாட நின்றவனின்
வேலைக்கு வந்தவனின்
வாடிக்கை கொளுத்திப்போட்டு
ஆடி ஆடிக் கொட்டும்போது
வேடிக்கையுமானது.

நெடுந்தூரம் சாலைகளில்
நச நசத்து சல சலத்து
வெல வெலத்துச் சகதிகளில்
வீடேறச் சறுக்கியபோது
ச்சே சனியனுமானது.


=====================================
தலைப்பிற்கு நன்றி நன்றி......தோழர்.தாகு

எழுதியவர் : சர் நா (28-Apr-15, 8:05 pm)
பார்வை : 194

மேலே