அப்பா

அம்மா எத்தனையோ முறை
திட்டினாலும் உறைத்ததில்லை
உடனே உறைத்தது
என்றேனும் அப்பா
முகம் வாடும் பொது
=============================
உன் அப்பா எவ்வளவு
உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடம் சொல்லும்
போது தான் எனக்கு
தெரிந்தது எத்தனை
பேருக்கு கிடைக்காத
அப்பா எனக்கு மட்டும் என
================================
கேட்ட உடனே
கொடுப்பதற்கு முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ கடவுள் ?
==============================
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடை பயில
சொல்லிக் கொடுத்த அப்பா
என் கரம் பிடித்து நடந்த போது
என்ன நினைத்திருப்பார் ???
=============================
லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான் தடுமாறியபோது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்
===========================
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதுஎல்லாம்
பெருமையாக சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம் ???
==========================
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
என சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும் ????
==========================
சொல்லிக் கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்று சொன்னதுமில்லை
வேண்டாம் எனக் கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு .
==================================
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைக்
துடைக்க இன்று
அப்பா இல்லை
========================
அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம் ....