உணர்வுகள்

வலி -
பிறக்கும்போது
தாய்க்குக் கொடுத்தேன்-
அதனால் அனுபவித்து
பிராயச்சித்தம் செய்கிறேன் !
கோபம்-
காண்பிக்கப் பட்டதால்
கற்றுக் கொண்டேன் -
என்னையே
தின்னத் தொடங்கியதால்
அடக்கிக் கொள்கிறேன் !
ஏக்கம்-
எதிர்பார்த்தது
கையில் கிடைத்ததும்
தணியும் என்று பார்த்தேன் -
கண்களில் குடியேறி
காலி செய்ய மறுக்கிறது !
ஏமாற்றம்-
அடிக்கடி சந்திப்பதால்
பழக்கப் பட்டு கை குலுக்க
தினமும் கிடைக்கிறது தவறாமல் !
கவலை -
பிறக்கும்போது
ஒட்டிப் பிறக்கவில்லை -
தொடர்கிறது வேதாளமாய்
தோளில் தொற்றிக் கொண்டு !
இன்பம் -
தேடியலைந்து
கொண்டிருந்த போது
உணர்ந்து கொண்டேன் -
அலைவதுதான் அதுவென்று -
தேடல் மட்டும் தொடர்கிறது !
அன்பு-
அகல் விளக்காக
மனதில் ஏற்றினேன் !
வலி போனது !
கோபம் தணிந்தது !
ஏக்கம் தீர்ந்தது !
ஏமாற்றம் ஏமாறியது !
கவலை பறந்தது !
இன்பம் பிறந்தது !