உணர்வுகள்

வலி -
பிறக்கும்போது
தாய்க்குக் கொடுத்தேன்-
அதனால் அனுபவித்து
பிராயச்சித்தம் செய்கிறேன் !

கோபம்-
காண்பிக்கப் பட்டதால்
கற்றுக் கொண்டேன் -
என்னையே
தின்னத் தொடங்கியதால்
அடக்கிக் கொள்கிறேன் !

ஏக்கம்-
எதிர்பார்த்தது
கையில் கிடைத்ததும்
தணியும் என்று பார்த்தேன் -
கண்களில் குடியேறி
காலி செய்ய மறுக்கிறது !

ஏமாற்றம்-
அடிக்கடி சந்திப்பதால்
பழக்கப் பட்டு கை குலுக்க
தினமும் கிடைக்கிறது தவறாமல் !

கவலை -
பிறக்கும்போது
ஒட்டிப் பிறக்கவில்லை -
தொடர்கிறது வேதாளமாய்
தோளில் தொற்றிக் கொண்டு !

இன்பம் -
தேடியலைந்து
கொண்டிருந்த போது
உணர்ந்து கொண்டேன் -
அலைவதுதான் அதுவென்று -
தேடல் மட்டும் தொடர்கிறது !


அன்பு-
அகல் விளக்காக
மனதில் ஏற்றினேன் !

வலி போனது !
கோபம் தணிந்தது !
ஏக்கம் தீர்ந்தது !
ஏமாற்றம் ஏமாறியது !
கவலை பறந்தது !
இன்பம் பிறந்தது !

எழுதியவர் : ஜி ராஜன் (5-May-15, 5:07 pm)
Tanglish : unarvukal
பார்வை : 182

மேலே