தேசியகீதத்தில் பிழை - சந்தோஷ்
இந்த குறும்பாக்கள் “ வல்லமை” மின் இதழில் வெளியாகியுள்ளது.
நன்றி வல்லமை.காம்
--------------------------------------
கல்லறையும் மரணித்துவிட்டது
இன்றைய விஞ்ஞானத்தில்
மின் மயானம்!
***
புகைப்பிடிக்கிறது பூக்கள்
தேசிய நெடுஞ்சாலை நடுவில்
அலங்காரச் செடிகள்!
***
போதைப்பொருளாகக் காந்தி
ஆயிரம்ரூபாய் விநியோகத்தில்
மதிமயங்கியது வாக்குரிமை !
***
அரசு கஜானா
தள்ளாடும் போதெல்லாம்
தாங்கிப்பிடிக்கிறார்கள்
டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் !
***
உலக மேதாவிகளின்
சிந்தனைகளைத்
தின்றுச் செழிக்கிறது
நூலகத்து கறையான்கள் !
***
பெரியாரின் கோட்பாட்டில்தானோ
மனித ஜாதிகளைப்
பேதமின்றித் தொடுகிறது
கொசுக்களும் ஈக்களும்?
***
சமூகப்பிணிகளைக் குணப்படுத்தத்
தமிழிலக்கியத்தில் இல்லையோ
மனித(ம்) லேகியம்?
***
அகோரப்பசியெடுத்து காத்திருக்கிறது
பகுத்தறிவு வெண்ணிலா
அமாவாசை மானிடர்களே!
கொஞ்சமேனும் கவனியுங்களேன்!
***
தேசியகீதத்தில் கருத்துப்பிழை
தமிழகத்தைக் காப்பாற்றவில்லை
காவேரியும் முல்லைப்பெரியாரும்!
***
கடைசியாக
இன்றைய அரசியல்வாதிகள்
கண்டுபிடித்து விடுவார்கள்
இந்திய இறையாண்மையை
அகராதியில்!
---இரா. சந்தோஷ் குமார்