யார் பயணம் யார் அறிவோம்

நீ ஒரு தொட்டிலில்
நான் ஒரு தூளியில்
யாருக்காய் யார் பிறந்தோம்

நீ ஒரு மடியில்
நான் ஒரு மடியில்
யார் பசிக்காய் யார் அழுதோம்

நீ ஒரு சுற்றமும்
நான் ஒரு சூழலும்
யாருக்காய் யார் வளர்ந்தோம்

உன் முதல் பார்வையும்
நம் முதல் வார்த்தையும்
யார் உறவை யார் வளர்த்தோம்

உன்மடி சாய நானும்
என் உயிர் சேரநீயும்
முதல்காதல் யார் மொழிந்தோம்

என்வானில் உயர நீயும்
உன்நினைவில் விரிய நானும்
யார் சிறகால் யார் பறந்தோம்

நீ அந்த மஞ்சம் தூங்க
உன் நினைவால் நெஞ்சம் ஏங்க
யார் கனவில் யார் மிதந்தோம்

ஊடலும் வாடலும்
முடிந்தபின் கூடலும்
யாருக்காய் யார் வளைந்தோம்

நீ ஒரு சாதியில்
நான் ஒரு சாதியில்
யார் பாவம் யார் அறிவோம்

நீ கொடும் சிறையினில்
நான் சுடும் தீயினில்
யார் சதியால் யார் பிரிந்தோம்

நீ மண மேடையில்
நான் ஒரு மூலையில்
யார் விதியால் யார் அழுவோம்

மரணத்தின் வலியில் நீயும்
மாறாத பலியில் நானும்
யார் கண்ணீர் யார் துடைப்போம்

இனி

நீ வேறு பாதை
நான் வேறு பாதை
யார் பயணம் யார் அறிவோம்

எழுதியவர் : பிரணவன் (6-Jun-15, 12:33 am)
பார்வை : 198

மேலே