தெய்வம் சான்ற திறல் -5

தெய்வம் சான்ற திறல்-5.

இமாசலப் பள்ளத்தாக்கில் ஒரு அழகிய பனி விழும் மலர் வனப் பகுதி. கஸ்தூரி மான் ஒன்று தன் குட்டியுடன் இளங்காலை நேரத்தில் புல் மேய்ந்து கொண்டு இருந்தது. திடீரென்று அந்த குட்டி முகத்தை வான் நோக்கி அண்ணாந்து பார்த்து ஏதொ ரம்மியமான வாசனை வருவதை உணர்ந்தது, தன் அன்னையிடம் அது கேட்டது.

”அம்மா, ஏதோ நல்ல வாசனை வருகிறதே, அது எங்கிருந்து வருகிறது?’.

”நீயே போய் தேடிப் பார்” என அதன் தாய் சொல்லியது.

அந்த குட்டி மான் முதலில் ஒரு யானையைக் கண்டது. அதன் அருகில் சென்று முகர்ந்தபோது வைக்கோல் வாசமே வீசியது. இது இல்லை என சிறிது தூரம் சென்று பார்த்தது. அங்கே ஒரு புலி படுத்துக் கிடந்தது. அதன் வயிறு பெரிதாய் இருந்ததாலும் அது வயிறார உண்ட களைப்பில் இருப்பதையும் அறிந்து அந்த குட்டி அருகில் சென்று பார்த்த போது மாமிச வாசனையே அடித்தது. இவ்வாறு வன விலங்குகள், பறவைகள் எனப் பலவாறு அருகில் சென்று முகர்ந்து பார்த்தும் அது முன்னர் ரசித்த அந்த ரம்மிய வாசம் இல்லையென உறுதி செய்து கொண்ட பின் மீண்டும் தன் அன்னையை நோக்கி ஓடியது. அம்மாவிடம் சென்றதும்,

“எங்கு தேடியும் அந்த வாசத்தைக் நான் முகரமுடியவில்லை” என கவலையோடு சொல்லியது.

“எல்லா இடத்திலும் தேடினாயா?” என அதன் தாய் கேட்டது

”ஆம் அம்மா, தேடிக் கொண்டு வெகு தொலைவு சென்று விட்டேன்; பின்னர் பயந்து போய்தான் திரும்பினேன்” என்றது.

“எல்லா இடத்திலும் தேடினாய்; சரி, உன்னிடத்தில் தேடினாயா?” என அதன் தாய் கேட்டது.

”என்னிடத்திலா, என்னிடமிருந்தா அந்த வாசம் வருகிறது” என்று அந்த குட்டி கஸ்தூரி மான் தன் முன்னங்கால்களைத் தூக்கி முகர்ந்து பார்த்தபோது தன்னிடமிருந்தே வருகிறது என்பதை உறுதி செய்து கொண்டது. அந்த வாசம், கஸ்தூரி வாசம் என்பதும், தான் ஒரு கஸ்தூரி மான் என்பதும், அது தன்னையே தேடியபோதுதான் அதற்குத் தெரிந்தது.

இப்படித்தான் நாமும் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டு உள்ளோம் என்பதும் அவரது முழு வார்த்தைகளால் விவரிக்க இயலாத உயிரின், அறிவின், உணர்வின், ஒரு அணுக்கூறாக நாம் ஆன்மா மூலம் அந்த கடவுளின் ஒரு சிறு துளியாய் படைக்கப்பட்டுள்ளோம் என்பது எளிதில் விளங்கிக் கொள்ள இயலாத உண்மையாகவும் தேடினால் மட்டுமே கிடைக்கும் ஞானமாகவும் உள்ளது.


இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்பு இருப்பதாக பக்தி இலக்கியங்கள் அத்தனையும் பேசுவதால் ஆன்மாவென்பது என்னவென்று விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

ஆன்மா என்பது சமயங்களின், தத்துவங்களின், புராணங்களின் அடிப்படையில், உருவமற்ற ஒன்று என்பதும், பல உற்பவங்கள் கொண்டது என்றும், உயிர் வாழும் மனிதர்க்கு அழிவில்லாத நிரந்தரமான ஒன்றும் ஆகும்.

புனித தோமாஸ் அக்குவினாஸ் ஆன்மா அனைத்து உயிர்கட்கும் உண்டு ஆயினும், மனிதர்க்கு மட்டும் அது அழிவில்லாதது என வாதிட்டார். கிரேக்க தத்துவ ஞானிகள் ஆகிய சாக்ரடீஸ், ப்ளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோர், ‘உள்ளம்/மனம்” உண்டென்றதுடன் அது அளவையியல் கூற்றுப்படி இயங்குவதே தெய்வீகமான மனித நடவடிக்கை என்றனர். தனது மரண நேரத்திலும் சாக்ரடீஸ், அனைவரும் மனச்சான்றின்படி நற்செயல் செய்யுமாறு வலியுறுத்தினார். எனவே கிரேக்கர்கள் உயிருடன் இருப்பதே ஆன்மாவுடன் இருப்பதாகக் கூறுவர்.

பஹாயி சமயத்தவர், ஆன்மா, கடவுளின் அடையாளம் என்பர்.

ஆங்கிலத்தில் சோல் எனப்படும் ஆன்மா, இலத்தினில், ஆனிமா என்றும், எபிரேய மொழியில் நெஃபேஷ் என்றும் அரபி மொழியில் நஃப்ஸ் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவின் மறைவுக்குப் பிறகு அவரது சீடரான புனித பவுல், ஆன்மாவுக்கும் (Nafs) ஆவிக்கும் (Ruah) (Spirit) இடையேயான வேறுபாடுகளை மிக விபரமாக விவரித்துள்ளார்.

இந்துத்துவமும் சமணமும், உயிரிகள் அனைத்துக்கும் ஆன்மா உண்டென கற்பிக்கின்றன. இதர பல சமயங்கள், ஆறுகள், மலைகள் போன்ற உயிரற்றவற்றிற்கும் ஆன்மா உண்டெனக் கூறுகின்றன.

ஆனால், அறிவியல் ரீதியில் வாதிடும் புத்த சமயத்தினர், ‘தன், சுயம், ஆன்மா என்பதெல்லாம் பாரம்பரிய சொற்கள். நிரந்தரமான ஆன்மா என்பது ஒன்று இல்லை. ஆன்மா விண்ணிலிருந்து வருவதோ அல்லது தன்னைத்தானே படைத்துக் கொண்டது என்றோ, அது இடம் பெயரும் வல்லமை கொண்டது என்றோ அல்லது மோட்சம் அல்லது நரகம் ஆகியவற்றிற்கு மரணத்திற்குப் பின் சென்று சேரும் என்பதை எல்லாம் நம்புவதற்கு காரணம் ஏதும் இருப்பதாக கொள்ள இயலாது’ எனக் கூறுகிறது.

கிறிஸ்துவ மறையின் முதுபெரும் தந்தை எனப்படும் புனித அகுஸ்தீன் என்பவர், “ஆன்மா ஒரு சிறப்புப்பொருள்; சிந்திக்க வல்லது; உடலை ஆட்சி செய்ய தன்னை மாற்றிக் கொள்ள வல்லது” என மூவம்ச இலக்கணம் வகுத்து உள்ளார். இதன்படி மனிதர் உடல் (Soma)
ஆன்மா(Psyche) மற்றும் ஆவி (Pneuma) என முக்கிய மூன்று அம்சங்கள் கொண்டது என்றும் உடல் ஆன்மாவிற்கெதிராக யுத்தம் செய்யும் என்றார். இந்த மூவம்ச இலக்கணம் காண்ஸ்டாண்டினோபிளில் நடைபெற்ற அனைத்து சமய எட்டாவது கவுன்சிலில் இரு அம்சம் கொண்டது என கத்தோக்லிக்க திருச்சபையால் திருத்தப்பட்டு அனைத்து கிறிஸ்தவர்கட்கும் விசுவசித்திட கற்பிக்கப்பட்டது.
எனவே ’கடவுளின் சாயல் என்பதால் மனிதரின் ஆன்மிக தத்துவம் உணர்த்துவது இதுவே’ என்பர்.

திருவிவிலியத்தில் யேசு கிறிஸ்துவின் அன்னை ஆகிய மரியாளின் பாடல், “என் ஆன்மா ஆண்டவரை போற்றுகிறது” என்பது மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று ஆகும். இதனைத் தொடர்ந்து, ஆன்மா என்ற சொற் பிரயோகம், இணைச்சட்டம் 4:29,ஜெரமையா 6:16, திருப்பா 42:11,62:1, 63:1,
103:1, 139:13-14, மத்தேயு 1`6:26, 22:37,, யோவான் 22:5 ஆகியவற்றில் இறவனுக்கும் மனிதருக்கும் உள்ள உள்ளார்ந்த , ஆத்மார்த்த உறவினை எடுத்துக் கூறும் இறை வார்த்தைகள் ஆகும்.

திருக் குரானிலோ எனில், “ மரணத்தின்போது ஆன்மாவை அல்லாவே எடுத்துக் கொள்கிறார். இறவாதோரின் ஆன்மாவை அவர்கள் உறங்கும்போதும், எவரெல்லாம் மரிக்க வெண்டும் என ஆனை பிறப்பித்து உள்ளாரோ அவர்களது ஆன்மா அவர்களிடம் திரும்பிப் போகாமல் வைத்துக் கொள்கிறார். பிறருக்கு ஒரு கால கட்டத்திற்கு ஆன்மாவை அனுப்பி வைக்கிறார். உண்மையில், இது குறித்து சிந்தித்திருப்பவர்கட்கு இதன் அடையாளம் காண முடியும் “ (39:42)
என தெள்ளத் தெளிவாக ஆன்மா இறைவனால் அளிக்கப்படுவது என்பது விளக்கப்பட்டுள்ளது. அத்துடன், இறை வசனங்கள், 3:28, 3:30, 6:12, 6:54,12:101, 20:41, 21:35, 28:16 29:59 ஆகியவற்றிலும் ஆன்மா என்ற சொற் பிரயோகம் இருப்பதும், ஒவ்வொரு ஆன்மாவும் சாவினை சுவைத்த பின் இறுதியில் அல்லாவிடமே வந்து சேரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆன்மா எங்கிருந்து பிறக்கிறது என ஆய்வோமெனில் அதற்கு மூன்று தோற்றுவாய் காட்டப்படுகிறது. 1. கடவுளால் நேரிடையாகப் படைக்கப்படுகிறது. 2. மனித கரு உற்பத்தி ஆகும்போது அல்லது அல்லது பிறிதொரு சமயத்தில் படைக்கப்படுகிறது.. பாரம்பரியமாக, தந்தை-தாய் ஆகியோரிடமிருந்து இயற்கையாய் உற்பவிக்கிறது 3. கரு உருவாவதற்கு முன்பே அது இருக்கிறது. என மூன்று மூலங்கள் இருப்பதாய் கூறுகின்றனர்.

நமது பாரத தேசத்தில் ஜீவன், ஆத்மா, புருஷம் என்றெல்லாம் வடமொழியில் கூறப்படும் இந்த ஆன்மாவுக்கும் இறைவனுக்குமான உறவு எப்படி விவரிக்கப்பட்டு உள்ளது என்பதை சில மகா வாக்கியங்களின் வாயிலாக அறியலாம்

. ரிக் வேதத்தின் தைத்தரேய உபநிடதம் 3.3 இன்படி ”பிரஞ்ஞானம் பிரம்மா” என்பது இந்த உணர்வு பற்றிய விழிப்புணர்வை நமக்குத் தருகிறது. உணர்வு என்பது, எதன் மூலம் நாம் பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, நுகர்கிறோமோ, பல்வகை பொருட்களையும் புரிந்து கொள்கிறோமோ, சுவைக்கிறோமோ, இவை யாவும் இருப்பதை அறிந்து கொள்கிறோமோ, இந்த அறிவே உணர்வு ஆகும். முதலில், நாம் இருக்கிறோம் என்ற உணர்வு. அதற்குப் பின், நம்மைச் சுற்றியுள்ள உலகம் என ஒன்று இருப்பதையும் உணர்கிறோம். அதற்குப் பின், நமக்கு கேட்க, பேச, நுகர, சுவைக்க, உள்ள உணர்வு. இந்த உணர்வே ப்ரஞ்ஞை என்பது. உணர்வே பரம்பொருள். உணர்வு பிரபஞ்சமாய் வியாபித்து இருப்பதால் ஒரு சிறு பகுதிக்குள் அது இருக்க இயலாது. அது மொத்த முழு உண்மையின் ஒரு பகுதியாயிருக்கிறது. அந்த உணர்வே பரம்பொருள். அதனை நம் உணர்வும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பரம் உணர்வென்றால் அது என்னிலும் இருக்கிறது அதன் மூலமே நான் அனைத்தையும் பற்றிய விழிப்புணர்வு கொள்கிறேன்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் (80 )

என்பார் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர்.

அடுத்து, ’இந்த சுயமே பிரம்மன்’ எனும் வேத மகா வாக்கியத்தையும் ’அகம் பிரம்மாஸ்மி’ எனும் வேத வாக்கியத்தையும் நாம் பொருள் உணர்ந்து கொள்வோம் எனில் இன்னும் சற்று நன்றாகப் புரியும். அதர்வ வேதத்தின் மாண்டூக்கிய உபனிடதத்தில் 1.2 இல் சொல்லப்படும் இந்த இந்த “அயம் ஆத்ம பிரம்மா என்பதன் பொருள் பின் வருமாறு ஆகும்.

’ஆன்மாவும் பிரம்மனும் ஒன்றே’. இதற்கு உதாரணமாக, சமுத்திரத்தையும் அதன் அலைகளையும் சொல்லலாம். நாம் ஒரே ஒரு அலை மீது மட்டும், கண் வைத்துப் பார்க்கும்போது பிற அலைகளும் சமுத்திரமும் தெரிவதில்லை. ஆனால் அந்த ஒரு அலையும் அந்த சமுத்திரத்தின் ஒரு பகுதியே.

இது ஆத்மாவாகவோ பிரம்மமாகவோ இல்லாமல் காட்சி காணும் ஒரு நிலையில் உள்ளதால்
இது அஹம் பிரம்மாஸ்மி என்பதற்கு நேர் எதிரிடையான ஒரு மஹா வாக்கியம் ஆகும்.. இதன்மூலம் ஆத்மாவும் பிரம்மனும் ஒன்றே என்பதை இது விளக்குகிறது.

நமக்குள் இருக்கும் ஆழ்ந்த உணர்வு நமது பொளதிக உடல், மனம், புத்தி இவற்றை எல்லாம் தனித் தனியே சொல்லாமல், நான் என்று கூற இயலாத வெறும் உடல் நான் அல்ல. நமது மூச்சு, மனம், நுகரும் கருவிகள், புத்தி, இவையெல்லாம் கூட நான் அல்ல . இதில் நான் என்பது ஒரு ஆழ்ந்த தூக்கத்தில் இவை எல்லாம் இல்லை எனும் உணர்வே நான். இதுவே நமது இயற்கையான உணர்வு. இதனை மிக அழகாக தெளிவாக விளக்கி இருப்பவர் இத்தொடரில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள நசிகேதனின் தந்தை ஆவார்.

நசிகேதன் மற்றும் ஸ்வேதகேது ஆகியோரின் தந்தை ஆகிய வாஜஸ்ரவஸ் என்பவரே உத்தாலக ஆருணி எனப்பட்ட பெரும் தவ முனிவரும் ப்ருஹதாரண்யக மற்றும் சாண்டோக்ய உபனிடதங்களில் காணப்படும் முதுமொழிகட்கு ஆசிரியரும் ஆவார்.

அயோத தெளம்யா எனும் மகாகுருவின் சீடராய் இருந்த (மகாபாரதம் 1.3) ஆரூணி, ஆசிரியர் சொற்படி கீழ்ப்படிந்து நடப்பவர். ஒரு மழை நாளில், வெள்ளம் வந்து விட்டதால், குருவுக்குச் சொந்தமான ஒரு வயலில் நீரின் போக்கினை வயலுக்குச் சரியாக அமைத்திட குரு சொன்னபடி ஆருணி கண்காணிக்கச் சென்றார். ஆனால், வெள்ள நீர், வயலின் வரப்பை உடைத்து, வெளியே செல்வதைக் கண்டு, எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் அவரால் அதனைத் தடுக்க முடியவில்லை. இறுதியில்,ஆருணி, தானே அங்கு படுத்து வெள்ளத்தைத் தடுத்தார். இரவு வரை வீடு திரும்பாத தம் சீடரைப் பற்றிக் கவலைப் பட்ட குரு அதிகாலையில் மற்ற சீடர்களோடு அங்கு வந்து பார்த்த போது, அவரது கடமை உணர்வையும், முழு ஈடுபாட்டையும் கண்டு மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் அவருக்கு ’உத்தாலகா’ எனப் பெயரிட்டார்.

இவ்வாறு தன்னை மறந்த உணர்வு என்பது தனது குருவின் சொற்படி நடப்பதே என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தாலக ஆருணி ’அஹம் பிரம்மாஸ்மி’ என்பதற்கு,
அஹம்—நான்,, இது பிரிக்க முடியாதது’ பிரம்மன்--என்றும் முழுமையான ; அஸ்மி—இருப்பது என வடமொழியில் அழகான விளக்கம் அளித்து உள்ளார். இதன்படி, பிரம்மா கால வரையற்றது; பிரபஞ்சமும் கால வறையற்றது. கால வரையற்றதில் இருந்து கால வரையற்ற ஒன்று வருகிறது. எனவே இதிலிருந்து அது கால வரையற்றதாக உள்ளது.

நமது உண்மையான இயல்பை, விழித்திருக்கும் நிலையில் நாம் காணக்கூடாது. நாம் ஆழமாக உறங்கும்போது இந்த அனைத்துடனும் நமக்கு உறவற்ற நிலையில் மட்டும் உணர முடியும். உண்மையான உணர்வு என்பது உடலின் சம்பத்தத்தால் தாக்கப்படாமல் இருப்பதும், பிரிந்து விட்டாலும் இயலாததும் ஆகி எங்கும் நிறைந்து இருப்பதால் அது அஹம் எனப்படுகிறது. ’நான் வருகிறேன்’ என்று பிரபஞ்ச உயிரி சொல்வது இந்த உடல் அல்ல.

எறும்பு ஒன்று, “நான் யானை“ என்று சொல்வது போல் அன்று இது. எறும்பு தான் யானை என்று சொல்வதனால் யானை ஆகி விடாது. அதைப்போலவே, நான் அம்பானி என்றோ, பில் கேட்ஸ் என்றோ சொல்லி விட்டால் அவர்களாக நான் மாறி விடுவது இல்லை. எனவே மந்திரங்களின் உட்பொருள் அறிந்து சொன்னால் அன்றி மந்திரங்கள் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. நான் பிரம்மன் என்பதில் இங்கு இருக்கும் நான் பிரம்மன் என்பது பொருளாகிறது. இது ஒரு மந்திரப் பொருள். நாம் பிரபஞ்ச அதிபதியாகிய பரம் பொருளுடன் அடையாளம் காட்டப்படக் கூடாது. நம்முள் இருக்கும் பிரபஞ்சத்தையே அந்த பிரபஞ்சத்துடன் அடையாளம் காட்டலாம். அதைத்தான் சாயல் என்பர். அஹம் பிரம்மாஸ்மி என்பதன் பொருளும் அதுவே. ஒரு தனி நபர் பரம் பொருளுக்கு இணை ஆனவர் என்பதல்ல இதன் அர்த்தம். நாம் அத்தகைய தவறுகளைச் செய்யக் கூடாது. இதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும் என்பதாலேயே, ஆன்மாவின் இலக்கணமாக மாணிக்கவாசகரின் திருவாசகம் பின் வருமாறு நம்மை வழி நடத்துகிறது.


மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. (419 )

இன்னும் இதே கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யுங்கால், சாம வேதத்தில், சாண்டோக்ய உபனிடதத்தில் 6.8.7 இல் நாம் காணும் ’தத் த்வம் அஸி’-- நீ அதுவாய் இருக்கிறாய் --என்பதன் பொருளையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

படைப்புக்கள் தோன்றுவதற்கு முன்னரே இருந்த தன்னிகரில்லாத ஒருவனை, பெயரற்ற உருவமற்ற, நிலையில்லா இப்பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் பரம்பொருள் நான் என்பதில் உள்ள உணர்வு. அஹம் பிரம்மாஸ்மி என்பதை வேறு விதத்தில் கூறுவதே இது. . .

அத்வைதப்படி, --தத்==உண்மை; பிரம்மன்; த்வம்= ஆன்மா
சுத்தாத்வைதப்படி---, சாரத்தில் தத், துவம் ஆகிய இரண்டும் ஒன்றே ஏனெனில் தத் என்றால் முழுமை; துவம் அதில் ஒரு பகுதி ஆகும்.
விஷிஷ்டாத்வைதப்படி-- தனிப்பட்ட ஆன்மாவின் அடையாளம் பெரும் பரம்பொருளில் ஒரு பகுதி என்பது.
த்வைதாத்வைதப்படி,--- சமமான மாறுபாடு அற்றதும் ;தனி ஆன்மா மற்றும் முழு பரம்பொருளின் பகுதி என்பதன் மாறுபாடும்.

மாயை இல்லாத பரமும், அவித்யா இல்லாத ஆன்மாவும் ஒன்று போலானவை. பிரபஞ்சத்தில் வாழும் இறைவன் ஒவ்வொரு ஆன்மா உள்ளும் உறைந்து வாழ்கிறான். இதையே ஆத்தும நிவேதனம் என்றும் கூறுவர். இதனை கூற வந்த மாணிக்க வாசகர், தமது திருவாசகத்தில்,

அன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங்
குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. (502)


என்பது உடல், ஆவி ஆகிய அனைத்திலும் ஆன்மா மூலம் அருள் ஜோதியாய், ஒளிப் பிழம்பாய் நிறைந்து நிற்கும் பரம்பொருள் உடன் ஆன உறவைத்தானே எடுத்து இயம்புகின்றன.

(வளரும்).

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (8-Jul-15, 5:05 pm)
பார்வை : 229

மேலே