மாற்றம் சிறிதெனினும் - கற்குவேல் பா
" மாற்றம் சிறிதெனினும் "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரண்டு நாட்களில் அலைபேசிகளில் அதிகமாக பகிரப்பட்ட காணொளி அதுவாகவே இருந்திருக்கக்கூடும் . பார்த்த நொடியில் கர்பப்பையை பிடிக்க தவரீருக்க மாட்டார்கள் தாய்மார்கள் . பொட்டிக்கடை பெரியவர் முதல் ஐந்து நட்சத்திர விடுதி முதலாளிகள் வரை பேச்சு அதுவாகவே இருந்திருக்கும் . இந்த வார செய்தித்தாள்களும் , இன்னும் வரும் வாரத்திற்கான தொலைக்காட்சி கருத்தரங்கங்களும் கண்டிப்பாக அதைப்பற்றியதாகவே இருக்கக்கூடும் .ஆம் .நீங்கள் நினைப்பது சரியே .
" அந்த பிஞ்சுக் குழந்தையின் கையில் மதுபானத்தை கொடுத்து குடிக்க வைத்த காணொளியே".
சரி உள்ளே செல்வதற்குமுன் சில புள்ளி விவரங்களைப் பார்த்து விடுவோம் . தமிழகத்தில் தற்போதுள்ள அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கை சுமார் 6800 .அவற்றோடு இனைந்து செயல்படும் பார்களின் எண்ணிக்கை சுமார் 4270.இவற்றில் பணிபுரிவோரின் எண்ணிக்கை சுமார் 28000.இவற்றால் கிடைக்கும் வருமானம் பல்லாயிரம் கோடி . யாருக்கு என்பது அடுத்தது .
ஆரம்பகாலத்தில் "கள்" என்ற மதுபானம் ஒன்றே வழக்கத்திலிருந்தது . அவை தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட்டன .ஆகையால் அவை இயற்கை பானங்களாகவே கருதப்பட்டன . அவற்றால் ஏற்ப்பட்ட கல்லீரல் இறப்போ , இருதய கோளாறோ இன்றைய மது பானங்கள் ஏற்படுத்துவதைக் காட்டிலும் நூற்றில் புள்ளி ஒன்று சதவிகிதமாகவே இருந்தது .ஒருவேளை ஆங்கிலேயர்கள் நம்நாட்டில் படை எடுக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு மதுபானங்கள் வந்திருக்குமா என்பதும் கேள்விக்குறியே .
அன்று விழாக்களில் மட்டுமே இடம் பெற்ற மதுபானங்கள் ; காலை மலையில் தேநீர் பருகுவதுபோல் இரவு நேரத்தில் வழக்கமாகிவிட்டது இன்று . நேரத்திற்கு வேலை முடித்து மனைவி பிள்ளைகளை பார்க்க வந்த கணவன்மார்களை , தம்வசமிலுத்து வியர்வை சிந்தி உழைத்த பணத்தை பறித்துக்கொண்டு நோயிலும் இழுத்துவிடுகின்றது இந்த மது . நூற்றில் நாற்பது மனைவியர் தம் கணவர்களை இழக்கும் வகையில் வீதிக்கு வீதி திறந்துவிடப்பட்டுள்ளது வேதனைக்குரியது .
தந்தை குடித்து தூக்கி எறிந்த குடுவையில் மீதியுள்ள சொட்டு மதுவை குடிக்க முயல்கிறான் பள்ளிப்படிப்பை தாண்டிராத சிறுவன் . இப்படி நிலைமை தலைகீழாக மாறிவிட . இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய எதிர்கட்சித் தலைவரோ தள்ளாடி வருகிறார் சட்டமன்றத்திற்கு ." தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா " இந்தக் கூற்றினை பொய்யாக்கும் முயற்சியோ .ஜாதிக்கட்சிகளின் கால்களைப் பிடிப்பதற்கே நேரமில்லை இவர்களுக்கு . இனிவரும் தலைமுறைபற்றிய கவலை முக்கியமா என்ன .
ஆர் கே நகர் இடைத்தேர்தல் அனைவரும் அறிந்ததே . எவர் வெற்றி பெற்றார் ; எவர் தோற்றுப்போனார் ; எவர் பங்கேற்க மறுத்தார் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் . இடைதேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் சென்னை திருவள்ளூர் மாவட்ட மதுக்கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டது . நம்மவர்களுக்குதான் இரவு ஆனாலே அரசாங்கத்திற்கு பணம் கொடுக்கும் நோயாயிற்றே . பிறகு என்ன காஞ்சிபுர நெடுஞ்சாலை மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது !
இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் , சென்ற வாரத்தில் இனி மதுக்கடைகள் மதியம் இரண்டு மணிக்கே திறக்கப்படும் என்ற செய்தி காற்றோடு காற்றாக தமிழகம் முழுவதும் பரவியது .காலையில் அரசாங்க மதுக்கோவில்களில் தீர்த்தம் பருகிச் செல்லும் பக்தர்கள் பதறிவிட்டனர் .இதுகுறித்து அரசின் மக்கள் தொடர்பாளர் நேரத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்று கூறியபிறகே காலை குடியர்கள் நிம்மதி அடைந்தனர் .
என்றுமே எதிலுமே கேரள மாநிலம் தனக்கென்று ஒரு தனியழகை உள்ளடக்கியதென்றால் மிகையாகது . மதுக்கடைகளுகும் இது விலக்கல்ல . அங்கு நடைபெறும் மதுக்கடைக் குறைப்பு , நம்மூர் மனைவியருக்கு ஆறுதல் தர மறுப்பதில்லை .கேரளம் இப்படியென்றால் நம் சகோதரம் ஆந்திர அரசு தமிழ்நாட்டு பாணியில் அரசு மதுக்கூடங்களை திறக்கப் போவதாக தகவல் .தமிழன் இதற்கா முன்மாதிரியாக இருக்க வேண்டும் .மிகப்பெரிய தலைகுனிவல்லவா நமக்கு !
மதுக்கடைகளை மூடக்கோரி தாக்கல் செய்யும் மனுக்களுக்கு அரசின் பதில் ,
மதுகடைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் மக்கள் நலத்திட்டப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதே . மக்கள்தொகையை குறைக்கவேண்டி எந்த நாட்டிடாமோ கள்ள ஒப்பந்தம் ஏதும் செய்து விட்டார்களா இந்த ஊழல் தலைவர்கள் .
மக்களுக்கெல்லாம் ஊற்றிக் கொடுத்து அழித்துவிட்டு , காட்டிற்குள் சென்றா ஓட்டு கேட்கப் போகிறார்கள் ? தன ஆட்சிக்கு கீழுள்ள மக்கள் நலன் கருதாத எந்த தலைவனும் நிலைப்பதில்லை என்பதே உண்மை .மதுக் கூடங்களை மூடத் துனியும் ஒரு அரசே இனி இங்கு நிலைக்கும் என்பதையும் உணர்த்துவோம் இவர்களுக்கு !
" மது உயிருக்கு கேடு " என்ற வாசகத்தை மூச்சாக்கி மதுக்கடைகளை மூடுவோம் அடியோடு !
வாழ்க தமிழ் ! வளர்க தமிழன் புகழ் ! ஓங்குக தமிழன் ஒற்றுமை !
-- கற்குவேல் .பா