கடமைகள் அதிகம் உரிமைகள் குறைவு - காவலர் நாங்கள்

காவலர் நாங்கள் நல் காவலர் நாங்கள்
ஊரை காக்க உரிமையை இழந்த காவலர் நாங்கள் -
கால் கடுக்க காவலும் , கையேந்தி உணவும்
கட்டாந்தரை படுக்கையும் , கடமையில் காட்டாயம் !

பிணத்திற்கு துணையும் பேய்களோடு உறக்கமும்
நாய்களோடு நட்பும் நாளும் அவசியமானதாய்
அவசரங்களுக்கு கூட அனுமதியில்லாத காலத்திலும்
மனைவியும் குழைந்தைகளும் பாசத்தின் ஏக்கத்தில் !

ஊர் உறங்க உறக்கம் தொலைத்தவர்களாய்
தெருத்தெருவாய் கடமையின் கண்காணிப்பில்
இரவும் பகலும் என்று எந்நேரத்திலும்
இளைப்பாற நேரமில்லாமல் தியாகப்பணியில் !

விடுதலை இல்லாத விடுமுறை இல்லாத
நிரந்தர கைதிகளாய் நாங்கள் -
காலத்தின் கடுமையான சோதனைகளில்
தண்ணீரில் கண்ணீரை சிந்தும் மீன்களாய் !

குற்றங்களை துரத்த குடும்பத்தை இழந்தவர்களாய் -
ஓய்வுகள் ஆய்வுகளில் கழிந்துகொண்டே -
கடமையை செய்தலில் கரிசனம் மறந்தவர்களாய் -
இருந்தும் இருதயத்தில் என்றைக்கும் இரக்கத்தோடு !

எங்கள் உயிர்கள் அடங்குவதும் சாத்தியமே -
எத்தனையோ ஊரடங்கு போராட்டங்களில் ,
கடமையை செய்தததில் காலத்திற்கும்
நிரந்தர ஊனம் கூட ஏற்றுகொள்ளதக்கதாகவே !

வியர்வை பூத்த காக்கி சட்டை
உழைப்பின் ஆழத்தை வெளிக்காட்டுவதாகவே -
அடிமைகள் ஒழியவில்லை -ஆம்
இன்றைக்கும் ஆற்றிக்கொண்டு இருக்கிறோம் காவலர் பணி!

அரசியலும் அதிகாரம் என்னும்
இரட்டை தாக்குதலில் நிலை குலைந்தவர்களாகவே-
இருந்தும் நீதியை நிலைநாட்டுவதே
எங்களின் இறுதி நீதி !

கடமைகள் அதிகம் -உரிமைகள் குறைவு -காவலர்கள் நாங்கள் !

எழுதியவர் : வினாயகமுருகன் (23-Aug-15, 8:43 am)
பார்வை : 299

மேலே