முண்டாசு கவிஞன் பாரதி

முண்டாசு கவிஞனின்
பட்டாசு வார்த்தைகளில்
துண்டாட பட்டவள் நான் .!

அடுப்படி அடக்கு முறைக்கு
செருப்படி கொடுத்திட துடித்த
முருக்குமீசைக்கு
தலை வணங்கும் சின்னப்பெண் நான் .!

பெண் என்றால் பொம்மையல்ல
பூமிக்கு வந்த புதுமையென
எடுத்துரைத்த
பொக்கிஷ கவிஞனின் அடிமை நான் .

ஏளனம் செய்யப்பட்டும்
எரித்திடும் வார்த்தைகள் வீசப்பட்டும் .
தளராத தமிழ் கவியின் தத்துப்பிள்ளை நான் .

நேர்கொண்ட பார்வை
நிமிர்ந்த நடை
வீரம் பேசும் விரல்கள்
வியக்க வைத்த மனிதன் .

குழந்தைகள் குதுகலிக்கும்
இவன் கவிக்கு குயில்களும் வாயசைக்கும் .
மூங்கில்கள் இசைகொடுக்க
இவன் தமிழின் முன்னால்
வார்த்தைகள் நாணிக்கொள்ளும் .

எட்டயபுரம் தந்த முத்து
புரட்சியில் இவன் எங்கள் சொத்து
தேடினான் புதுமைப்பெண்ணை
நன்றி நவில்கின்றேன் அவன் கண்ட
பெண்ணாய் .!!!

எழுதியவர் : கயல்விழி (11-Sep-15, 11:24 am)
பார்வை : 1527

மேலே