பம்மாத்து முயற்சிகள்

தனிமையின் பொழுதுகளில்
இருள் தனக்கென கொண்டுள்ள
சிறு சிறு சப்தங்களில் மிரட்டுகிறது
நானோ கண்களை இறுக்க
மூடிக்கொள்கிறேன்

உன் நினைவுகள் வந்து
மூடிய என் இமைகளைத் திறந்து
வெளியெங்கும் நீ
கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது

பம்மாத்து நடையில்
மெல்ல ஊா்ந்து
சாளரத்தைத் திறந்து பாா்க்கிறேன்
வெட்டவெளியெங்கும்
அவ்வாறே நீ சிதறிக் கிடக்கிறாய்

வெளியே வந்து
ஓரே ஒரு உன்னையாவது
பொறுக்கி எடுக்க
முயற்சித்தபோது
தரையோ உன்னை
இறுகப் பற்றிக் கொள்கிறது

விடிவதற்குள் உன்னைப்
பற்றியாக வேண்டும்

விடிந்த பொழுதுகளில்
சுய சிந்தனையோடும்
தெளிந்த புத்தியோடுமல்லவா
இருக்கிறாய் நீ...!

எழுதியவர் : புதிய கோடங்கி (6-Oct-15, 11:22 am)
பார்வை : 104

மேலே