பவித்ரா வரலக்ஷ்மி விரதம் கொண்டாடுகிறாள்

பெரிய பன்னாட்டு நிறுவனமொன்றில்
பதவி வகிக்கும் பவித்ரா
வரும் வெள்ளிக்கிழமை
வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப் போகிறாள்.

அம்மாவுமில்லாமல்,மாமியாருமில்லாமல்
தலை நோம்புக்குப் பிறகு
முதல் தடவை
தனியாக செய்யப் போகிறாள்.
அவள் புருஷன் கூட
" அவுட் ஆப் தி கண்ட்ரி ".
ஒரே டென்ஷன்.

பல தடவை தொலைபேசியிலும் ஸ்கைப் பிலும்
அம்மாவிடமும் , மாமியாரிடமும் பேசி
என்னன்ன செய்யவேண்டும் என்றும்
'எது நம்ம ஆத்துப் பத்ததி ' என்றும் விசாரித்து
செக் லிஸ்ட் செய்து கொண்டாகிவிட்டது.

வேண்டிய சாமானெல்லாம் வாங்கி வைத்துவிட்டாள்.
அலுவலகத்துக்கும் வெள்ளிக்கிழமை விடுப்பு சொல்லிவிட்டாள்.
பூஜை செய்ய வாத்தியாருக்கும், சமையல் மாமிக்கும் சொல்லியாகிவிட்டது.
( அன்று சாயங்காலம் சுமங்கலிகளை அழைத்து வெற்றிலை பாக்குடன் ஹை டீ யும் கொடுப்பதாக ஏற்பாடு.)

நாளை வெள்ளிக்கிழமை !

வியாழன் அன்று மாலையே
வெள்ளிக் கலசத்தில் தேங்காய் வைத்து ,
அம்மன் முகத்தைப் பொருத்தி
மஞ்சள் கொத்து , மாவிலைத் தோரணங்களுடன்
அலங்காரம் செய்தாகிவிட்டது.

இரவு முழுதும் எக்சைட் மென்ட் டில் தூக்கம் வரவில்லை!
விடிகாலையிலேயே எழுந்துவிட்டாள்.
குளித்து முடித்து ரெடிமேட் பட்டு மடிசார் கட்டிக்கொண்டாள்.
கை , காது , கழுத்து நிறைய நகை அணிந்துகொண்டாள்.
பூஜை சாமான் எல்லாம் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள்.
எல்லாம் ரெடி,.
வாத்தியாரவரவேண்டியது தான் பாக்கி.

நேரம் இருப்பதால் ,
அம்மனுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்து
அம்மாவுக்கு அனுப்பிவிட்டு
வாத்தியாருக்காகக் காத்துக் கொண்டிருக்கையில் ---------

அம்மாவிடமிருந்து போன்.!

எடுத்துப் பேசுகிறாள் பவித்ரா.

' ஏண்டி, இவளே , கழுத்திலே மாங்கல்யம் எங்கேடி ??"

பவித்ராவுக்கு ஷாக்.!

ஓடுகிறாள் மாடிக்கு -

எப்போதோ கழட்டி ,
எங்கேயோ மாட்டி வைத்த ,
மாங்கல்யச் சங்கிலியைத்
தேடி எடுத்து சூடிக் கொள்ள!

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (10-Oct-15, 9:45 am)
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே