வானம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புத்திக்கும் சக்திக்கும் எட்டாத
---தூரத்தின் பூங்கா வானம் !
எத்திக்கும் விரிந்திருக்கும் பூஞ்சோலை !
---சூரியனும் ஏறி நிற்க
மத்திக்கு மஞ்சளுறும் ! மாலையிலே
---சிவப்பாகும் ! மறைந்த பின்போ
முத்துக்கள் பூத்திருக்கும் இருள்வானம் !
---அதன்சோதி முழுமை வெள்ளி !

மேகங்கள் மிதக்கின்ற நீலநிறப்
---பெருங்கடலாம் ! மேளம் கொட்டி
ராகங்கள் இசைக்கின்ற பூபாளம்
---எல்லாமே ராவின் வண்ணப்
போகங்கள் கொண்டிருக்கும் மழைமேகம்
---காட்டுகின்ற பொம்ம லாட்டம் !
மோகங்கள் கூட்டுகின்ற வானவில்லும்
---கண்ணுக்கு மோட்ச மாகும் !

எல்லையதும் இல்லாத எழில்வண்ணப்
---பாய்விரிப்பு ! என்றும் வானை
வல்விரைந்து படமெடுக்கும் புகைப்படக்
---கருவியது வாளாம் மின்னல் !
சொல்லுபொருள் யாவிலுமே உயர்ந்ததுகாண்
---வானந்தான் சொர்க்க வாசல் !
கொல்லு(ம்)விதம் அதில்புகையைக் கலந்துவிட்டு
---தீமைதனைக் கொள்ளல் வேண்டா !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (20-Oct-15, 3:53 pm)
பார்வை : 90

மேலே