கனாக்காலத்து நினைவுகள்

ஆடுகின்ற...
அந்த ஒற்றைப் பல்லை
நாவினால் தெத்தித் தெத்தி
அழிச்சாட்டியம் செய்தும்
அடம்பிடித்து விழமறுக்க..

அப்பல் குறித்த
புலம்பல்களின் ஊடே
கண்ணயர்ந்த ஓர்இரவில்
திடீரெனயெழுந்த
யெவன பீதியில்
அனிச்சையாய்
நகர்ந்த கையோடு
ஒட்டிவந்தது அப்பல்..

ஒற்றைப் பல்லோடு
ஓலமிட்டபடி
ஓரிரவு நீள..

முந்திவரும் ஞாயிறுவின்
முனகல்களின் கீற்றுக்குமுன்
தலையணைக்குள் புதைத்த
தன்கையோடு பல்எடுத்து
சாணத்தில் திணித்து
கோழிகளுக்கு இரையாகாதவாறு
ஓட்டுமேல் எறிந்த அப்பருவத்து
கனாக்காலத்து நினைவுகளை...!

ஆடும் தன் பல்காட்டி
என் செய்யவென்ற
உன்னிடம்
எப்படியுரைப்பேன்
என்மகனே...!
---------------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (24-Oct-15, 9:47 am)
பார்வை : 398

மேலே