பெருமழை இன்னும் ஓய்ந்தபாடில்லை

சுவரோடு சாய்ந்து
சாயம் உடுத்தக்காத்திருக்கிறது
தேடும் ஓர் உயிரின் அழுத்தம்

உறைந்துபோன இதயம்
சம்பாஷனையற்ற திண்ணையாய் வறண்டிருக்கிறது

வசந்தமும் வறட்சியும்,
ஊகிக்க முடியாத வானவில்லும்,
மாட்டுக் கொட்டடி சுற்றி
வண்ணம் உதிர்த்துக்கிடக்கின்றன

பெருமழை
இன்னும் ஓய்ந்தபாடில்லை

ஆணின், உதடு தடித்த உச்சரிப்புகளில்,
விழுந்தெழுவது சிரமமாகத் தெரிகிறது
அவனின் மிதியடிகள்
வயிற்றில் பாதம் பதித்திருந்தன

பொழுது சாய்ந்தபோதில், விரசம்,
எப்போதும்போல் பின்கட்டு வழியாகவே
படுத்தெழுந்து கொள்கிறது
விறைத்து விழ்ந்தவை எல்லாம்
வேகமாய் அவளுக்குள்

பெண்ணின்,
விடுதலை குறித்த அச்சாரம் மட்டும்
மழை ஊறிய அட்டைகளாய், அவளை விட்டு,
கால்கள் இழுத்து மெதுவாய் நகர்கிறது

பெருமழை
இன்னும் ஓய்ந்தபாடில்லை..

எழுதியவர் : அகிலா (30-Oct-15, 5:30 pm)
சேர்த்தது : Ahila
பார்வை : 1900

மேலே