நம் பிள்ளைகள்

பிறந்தவுடன் விட்டுவிட்டு
வேலைக்கு போய் விடுகிறோம்....
பூனைக் குட்டிகளாய் அலைகிறார்கள்.
கவனிக்க இயலாமல்
பொருளுக்காய் அலைகிறோம்....
எருமை கன்றுகளாய் கிடக்கிறார்கள்.
புத்தக பொதிகள் சுமத்தி
பள்ளிக்கு துரத்தி விடுகிறோம்....
கழுதைகளாய் நடக்கிறார்கள்.
கருத்தறியா வயதினில்
தனியாய் விடுகிறோம் பள்ளியில்....
கரடியாய் கத்துகிறார்கள்.
ஆசிரியர்களும், பெற்றோர்களும்
சொல்வதை திரும்ப சொல்லி....
கூண்டு கிளிகளாய் ஆகிறார்கள்.
கல்வி முடிப்பதற்குள்
கண்கள் கலங்கி போய்....
வண்டி மாடுகளாய் ஆகிறார்கள்.
நட்பு, காதல், காமம் போல
பல்வேறு உணர்வுகளால்....
குரங்குகளாய் திரிகிறார்கள்.
படிப்பு, திறமைக்கேற்ப
வேலை தேடித்தேடி....
நாயாய் அலைகிறார்கள்.
பணத்தை குறிவைத்து
அல்லும் பகலுமாய்....
கழுகாய் சுற்றுகிறார்கள்.
நாம் குழந்தைகள் பெற்று
பிள்ளைகள் வளர்ப்பதாய்.....
பெருமைப் பட்டுக்கொள்கிறோம்.