பழிக்குப்பழி
மண்ணை மிதிக்க முகம் சுழித்தவனும்..
நீரில் கால் நனைக்க முடியாதென்றவளும்..
சோற்றைத்தந்த சேற்றை வெறுத்து..
காடு கழனி நிலம் நீச்சை விற்றுப்போட்டு..
குணங்கெட்டு பட்டணம் போய்..
ஏழாம் தளத்தில் எண்ணூறு சதுர அடியை
உலகமாய் அமைத்து அலங்கரித்து
வெள்ளை சட்டையில் ஒய்யாரமாய் திரிதல் கண்டு..
வெகுண்டெழுந்தாள் இயற்கை அன்னை..
கடலின் துவேசம்.. காற்றழுத்த தாழ்வு மண்டலம்..
காற்றின் கோபம்.. சுழன்றடிக்கும் சூறாவளி.
வானின் குமுறல்.. கொட்டித்தீர்க்கும் கொடுமழை..
நிலத்தின் வயிற்றெரிச்சல்.. முற்றும் நீர் உறிஞ்சாமல்..
மண்ணில் கால் வைத்து விட்டோம்..
சேற்றில் நடந்து விட்டோம்...
மன்னித்து விடடி மாதா..
கோபத்தாண்டவம் தாளாதினி..
_________________________________________________________________
# செந்தாமரைக்கொடி ...#

