மனக்கிறுக்கல்

கற்பனைத் தேரில் ஊர்வலம் போகும்
விற்பனை மாந்தர் உலகினில் அதிகம்
அற்புதமான சொல்லங்காரப் பேச்சே
விற்பனையாளனின் முதல் முதலீடாகும்

இயற்கை சூழல் எதற்கும் தேவை
செயற்கைக்கு எதற்கு அதிக வேலை
முயற்சி இருந்தால் முடியாதது இல்லை
இகழ்ச்சிதானே முயற்சிக்கு முக்கிய மூளை

விளங்காத வாழ்க்கை வாழ்வதைவிட
வீழ்வதே மேலென்பேன்
இரங்காத ஜென்மம் இருந்தென்ன
இறந்துப் போ என்பேன்

கலங்காத கண்கள் யாருக்கு உண்டென
உலகில் தேடுகின்றேன்
அலுங்காத உடம்பை வைத்துக்கொண்டு
அப்படியென்ன உயிரென்றேன்?

சுழலும் பூமிபோல் உலாவும் ஆவியும்
உலகை சுற்றி வருகிறது
வாழும் வாழ்க்கையும் ஆழம் பாத்துதான்
ஆற்றில் காலை விடுகிறது

ஜாதி தீயை மூட்டிவிட்டு - சில
ஜென்மங்கள் குளிர் காய்கின்றது
நீதி வழங்கும் நீதிபதிகளுக்கே – பல
சமயங்களில் குழப்பம் நேர்கின்றது

நேர்த்திக்கடன் முடிப்பதற்கு –
தெய்வத் திருத்தளம் செல்கின்றார்
செய்தப்பாவம் தொலைப்பதற்கு –
புனித தீர்தத்தில் குளிக்கின்றார்

மூடநம்பிக்கையில் மூழ்கி மூழ்கியே
முக்கால் வாழ்வை கழிக்கின்றார்
மூச்சு முடியப்போகும் தருவாயில்தான்
மனிதர் மனிதராய் இருக்கின்றார்.

எழுதியவர் : இரா.மணிமாறன் (19-Nov-15, 7:30 pm)
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே