யாவும் அது
மழை நாட்களில் நாங்கள்
ஒதுங்கி நின்றது
அந்தக் குடையின் கீழ்தான்
நீர்ம வளத்தின் பாடம்
கற்றுக் கொண்டது
அந்த ஆசானிடம் தான்
எங்களோடு சில காக்கைகளும்
'கா' வன்னா படித்தது
அந்தப் பள்ளியில் தான்
சில வெயில் நேரங்களில்
அயர்ந்தது கூட அந்தத்
திண்ணையில் தான்
ஊஞ்சலாட
கண்பொத்தி விளையாட
பம்பரம் சுற்ற என
எங்களின் விளையாட்டுக்
கூடமும் அதுதான்
இவ்வளவு ஏன்
பசியாற்றப் பழங்கள்
நீட்டியது கூட
அந்தக் கைகள் தான்
வெட்டிகளுக்கு மட்டும்தான்
அது மரமாக...
... மீ.மணிகண்டன்