அவள் எனக்கானவள்- Mano Red
அவளின்
விரல்கள் வருடிய
கன்னத்தில்
உண்டான வெப்பம்,
ரேகையுடன் சேர்த்து
மயில் தோகையையும்
வரைந்து சென்றதில்
நிமிடத்தில் மறைந்து பிறந்தேன்.
அங்கங்கே அவிழ்ந்து கிடக்கும்
சோக முடிச்சுகளை
ஒருசேரக் கட்டமைத்து
ஒழுங்காக்கிய
தொடுதலிலே எத்தனை சுகம்.
முகத்தில் பரவியிருந்த
வேதனை முடிகளை
விவரமான நுட்பத்தில்
சவரம் செய்தது போல
பளபளப்பாக்கியது
அந்த வருடலின்
உயிர் பரவல்.
இதற்குமேலாக
ஆணி அறைய முடியாது
எனத் தெரிந்து,
வலிகளின் ஊடாக
மெல்லிய காகிதப் பூக்களை
நடுவது போல்
தொட்டன விரல்கள்.
இளமையின் கொடிய
கண்ணீர் துளிகளை
நக கண்கள் வழியாக
கவர்ந்து எடுத்த அவள்
எனக்கானவள்.
(முற்றிலும் கற்பனையே- சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது)