நாய் வால்

நாய் வால்
(நகைச்சுவைக்காக மட்டும் யாருடைய நம்பிக்கையையும் கொள்கையையும் இழிவு படுத்தும் நோக்கம் முற்றிலும் இல்லை இதனால் யார் மனமும் புண்பட்டால் என்னை மன்னிக்கவும் )
ஏதோ வழக்கம் போல் இல்லை அது மட்டும் அவருக்கு நன்கு புரிந்தது. தன் மன நிலை இயல்பாய் இல்லை, இது தான் சரியான முடிவு என்று தனக்குள் எண்ணிக்கொண்டு தன் உருக்கரைந்தார்(மறைந்தார் ) அந்த தேவ முனி நாரதர். மீண்டும் வைகுண்டத்தில் தோன்றினார் நாரதர்
அங்கும் நிலை இயல்பாய் இல்லை சிறு புள்ளியாய் நின்ற மன உறுத்தல் இப்போது பேரிடராக உருவெடுத்தது. இதை குறித்து விஷ்ணுவிடமே கேட்டு விடலாம் அதற்கு தானே இங்கு வந்தோம் என்று அவர்குள்ளே பேசி கொண்டார். தர்பார் மண்டபத்தை நோக்கி நடந்தார் நாரதர் அவை வெறிச்சோடி இருந்தது. பின்பு வசந்த மண்டபத்தை நோக்கினார்
அங்கு ஸ்ரீ மற்றும் பூ தேவிமார் நின்று இருந்தனர் (ஸ்ரீ ,பூ இருவரும் விஷ்ணுவின் மனைவிமார் )அவர்கள் அருகில் சென்ற நாரதர் தாயே அடியேனின் பணிவன்பான வணக்கங்கள் என்றார். அவர்கள் இருவரும் வாய் திறவாது நாரதரின் வணக்கத்திற்கு சைகையால் தலையசைத்து பதிலளித்தனர். அம்மையரே பேசாமை ஏனோ என்று நாரதர் வினவ எல்லாம் எங்கள் சுவாமியால் வந்தது என்று கூறி மறுமொழி பேசாமல் அவ்விடம் விட்டகன்றனர்.
இனி பகவானை எங்கே பார்ப்பது என்று குழம்பியவராய் வைகுண்ட திரு மாளிகை நோக்கி நடந்தார். அங்கு சென்று வாசலில் துவார
பாலகர்களிடம் குசலம் விசாரித்து உள்நுழைந்தார். ஆனால் விஷ்ணு பகவானோ எதையும் கண்டு கொள்ளாமல் நூதன பொருளுடன் மல்லிட்டுகொண்டிருந்தார் (நோண்டிக்கொண்டு இருந்தார் ) நாரதர் பகவான் அருகில் சென்று பிரபு என்றார் விஷ்ணு தன் வேலையே கண்ணாய் இருந்தார் பின்பு உரக்க சுவாமி என்றார்.
சற்று பரபரப்புடன் வா குழந்தாய் உன் வரவு இனியதகட்டும். லோகத்தார் க்ஷேமம் தானே ?
உன் அன்னை தந்தையர் குசலம் தானே ?
(இனி நாடக பாங்கில் )
நாரதர் : அனைவரும் க்ஷேமம். தாம் என்ன செய்து கொண்டு இருக்கிறிர்கள் நான் அறியலாமோ அய்யனே ?

விஷ்ணு : திருவேங்கட பதியில் பக்தன் ஒருவனால் அன்பளிப்பாய் கிட்டிய ரேடியோ பெட்டி குழந்தாய். எத்தனை காலம் தான் பூமி நிலவரத்தை ஞான திருஷ்டியால் காண்பது சிறு மாற்றமாய் இதில் கேட்க்கலாமென்றால் இது வேலை செய்யவில்லை வேலை செய்யுமா என்று முயற்சிக்கிறேன்.
நாரதர் : சற்று என்னை அனுமதித்தால் என்னால் சரி செய்ய முடியும் என்று தோன்றுகிறது.
விஷ்ணு : முடிந்தால் முயன்று பார் பிள்ளாய் (என்று கூறி விஷ்ணு ரேடியோவை நாரதரிடம் ஒப்படைத்தார் )
(விஷ்ண்விடம் பெற்ற ரேடியோ பெட்டியை சுற்று முற்றும் திருப்பி திறந்து பார்த்து பின் வியந்தவராய் பேசலானார் )
நாரதர் : பிரபு இதை இயக்கும் பேட்டரி இல்லை அதுதான் பெட்டி ஒலிக்கவில்லை ஒரு நொடி பொறுங்கள். (என்று தன்
உள்ளங்கையை சற்று முன் நீட்டினார் கையில் பேட்டரிகள் வந்தன , அதை பெட்டியில் போட்டு ரேடியோ வை இயக்கினார் )
ரேடியோ : இது செய்திகள் நேரம் வாசிப்பது லொள்
அரசியல் ஊழல் படியலை புள்ளியல் துறை வெளியிட்டது அதில் 4823456789.786 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது ஊழல் அரசியல் வாதிகள் பெயர் சிக்கிரம் வெளியிடப்படும்.காஷ்மீரத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள் பஞ்சாபும் அவர்களுக்குரியது என்று கருத்து, வரும் குடியரசு தினத்தில் பேரழிவு ஏற்படுத்தும் சதி திட்டம் தீட்ட பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்.சென்னை சிட்பண்ட் மோசடி வழக்குகள் மட்டும் லட்சத்தை தாண்டியது (என பல கோப்புகள் அடங்கிய செய்திகளை ஒலித்தது ரேடியோ )

விஷ்ணு : என் மனம் இம்மானுடரை எண்ணி சஞ்சல படுகிறது நாரதா என்று தான் இவர்கள் சமாதானத்தை ஏற்று விளைந்ததை பகிர்ந்து உண்டு பேராசை விடுத்தது வாழ்வார்களோ ? நாரதா நீ திரி லோக ஞானி ஆயிற்றே ஒர் உபாயம் கூறேன் !

நாரதர் : என்னிடம் ஒர் உபாயம் உண்டு தாங்கள் சித்தப்படல் வேண்டும் அய்யனே

விஷ்ணு: சொல் உத்தம யோசனை எனில் அங்கீகரிக்கிறோம்

நாரதர் : அய்யனே பூலோகத்தில் இப்போது கலியுகம் நிகழ்கிறது
கிட்டத்தட்ட தம் கிருஷ்ணாவதாரம் செய்து 5500 வருடங்கள் ஆயின
மன்னராட்சி முறை ஒழிந்தது எங்கும் மக்கள் ஆட்சி அடுத்தமுறை தாமே ஆட்சி அமைக்க வேண்டும் அதற்கு நிதி வேண்டும் , அரசாங்க வேலை அதற்கு லஞ்சம் அளிக்க நிதி வேண்டும் மருத்துவ மனை அதில் நுழைந்தால் நிதி எங்கும் நிதி எதிலும் நிதி. நிதி பிரச்னை தீர்ந்தால் மானுடர் தம் அண்டைஅயலாரை துன்புறுத்த மாட்டார்கள்.

விஷ்ணு : அதற்கு உன் யோசனையை முதலில் சொல்.

நாரதர் : அது மிகவும் எளிது அனைவருக்கும் அன்று மாதவி புதல்வி மணிமேகலைக்கு கிடைத்த அக்ஷய பாத்திரம் போல் ஆளுக்கு ஒரு பாத்திரம் அது அவர்தம் தேவையை ஈடேற்றும். அவ்வளவுதான், பிறகு யார்வழிக்கும் அவர்கள் செல்ல மாட்டார்கள்

விஷ்ணு: சற்று சிரமம் மானுடரை இது சோம்பேறிகளாக்கும் எனினும் செய்யலாம் பிணக்கின்றி வாழ்ந்தால் அது நமக்கு போதும்.
(விஷ்ணு : யாரங்கே !! முரசை அரைந்து அழைத்தார் சேவகன் ஒருவன் வந்தான். விஸ்வகர்மாவிடம் நாரதன் தரும் லிகித்தை கொடு அதில் அக்ஷய பாத்திரம் செய்யும் சூதிரம் உள்ளது மேலும் எண்ணிக்கை விபரத்திற்கு தலைமை தணிக்கையாளனை அணுகசொல் ) விஷ்ணு ஆணைப்படி பூலோகத்தில் அனைவருக்கும் கிட்டியது அக்ஷய பாத்திரம். அனைவரும் அதை முறையாய் பயன் படுத்தினார்கள்

.
.
.
சில நூறு வருடங்கள் கழிந்தன .
மீண்டும் நாரதரும் விஷ்ணுவும் சந்தித்தனர்
நாரதர் : நாராயண நாராயண பிரபு க்ஷேமம் தானே

விஷ்ணு : மக்கள் க்ஷேமமே நம் க்ஷேமம் பூலோகத்தில் மக்கள் அனைவரும் உன் யோசனையால் க்ஷேமமாய் வாழ்கின்றனரா ?

நாரதர் : மௌனித்தார் (ரேடியோ வை பார்த்தார் )

விஷ்ணு:ஓ இதன் மூலம் அறிந்து கொள்ள சொல்கிறாயா ? அதுவும் சரி தான் (என்று ரேடியோவை இயக்கினார் பெருமான் )

ரேடியோ : இது செய்திகள் நேரம் செய்திகள் வாசிப்பது மியாவ்
அக்ஷய பாத்திர விநியோகத்தில் ஊழல், அக்ஷய பாத்திர சேமிப்பு கிடங்கை சக்திவாய்ந்த வெடிகுண்டால் தகர்க்க தீவிரவாதிகள் சதி திட்டம் உளவுத்துறை தகவல். . . . .என்று செய்திகளை அடுக்கிகொண்டே போனது ரேடியோ

விஷ்ணு நாரதரை வெறித்து பார்த்தார் நாரதர் ஏதும் பேசாமல் மறைந்தார்

எழுதியவர் : ஆனந்தன் (7-Dec-15, 5:44 pm)
சேர்த்தது : ஆனந்தன்
Tanglish : nay val
பார்வை : 680

மேலே