விவசாயம்--படித்த செய்தி

-வேளாண்மணி
முதல் தலைமுறை விவசாயியோ, மூத்த விவசாயியோ... விவசாயி என்பவன் தன்னை தினந்தோறும் ஒரு போர்வீரனைப்போல் தயார் நிலையிலேயே வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். நொடிக்கு நொடி... நிமிடத்துக்கு நிமிடம் வேளாண் தொழில்நுட்பங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. கடந்த காலத்தின் இயற்கை விவசாயம் இன்று கொடிகட்டிப் பறக்கிறது.

கம்பும் கேழ்வரகும் சோளமும் சாமையும் சாப்பிட்டவர்கள் ஒருவேளை 'நெல்லுச்சோறு'க்கு ஏங்கிய காலமும் உண்டு. ஆனால் இன்று, அரிசி வேண்டாமே... சிறுதானிய உணவுக்குப் போங்களேன் என மெத்தப் படித்த மருத்துவர்களும் உணவியலாளர்களும் பரப்புரை செய்கின்றனர். நகரத்து குளிர் அங்காடிகளில் கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி என சிறுதானியங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. காலச் சக்கரம் இடைநில்லாது சுழல்வதால்தான் இந்த மாற்றங்கள்.

வேளாண்மணி என்ற இந்தப் புதிய பகுதியில், இனி வேளாண்மையில் உள்ள பல்வேறு புதிய, பழைய பயனுள்ள தொழில்நுட்பங்கள், கால்நடை வளர்ப்பில் புதிய கோணங்கள் என்பதாக பல்வேறு செய்திகள் இடம்பெறப்போகின்றன. கட்டுரைகளோடு அது தொடர்புடைய புகைப்படங்கள், வீடியோ காட்சிகளும் இடம்பெறும். ஆங்காங்கே உள்ள முற்போக்கு விவசாயிகளின் அறிமுகம், மண்ணில்லா வேளாண்மை, சூரிய சக்தி மோட்டார்கள் என அதி நவீனமும் உண்டு. கால்நடைகளுக்கான மூலிகை வைத்தியமும் உண்டு.

இயற்கை விவசாயம்... செயற்கை விவசாயம் என்ற எந்த முகமூடியும் நமக்கில்லை. உள்ளதை உள்ளபடியே பேசுவோம். அவரவர்களுக்கு எது சாத்தியமோ அதைச் செய்யட்டும். நாம் எதற்கும் எவருக்கும் எதிரியுமில்லை. உண்மையைச் சொல்வோம். அதைச் சற்று உரக்கவே சொல்வோம். அதனால், ஒற்றை விவசாயிக்கு மட்டும் பலன் கிடைத்தாலும்கூட மகிழ்ச்சியே.

S.V.P.வீரக்குமார்
ஊரோடி வீரக்குமார் எனும் பெயரில் எழுதும் S.V.P.வீரக்குமார், தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி. எழுபதுகளில் தனது வேளாண்மை வாழ்க்கையைத் தொடங்கி, விவசாயம், கால்நடை குறித்து எழுதுவதை தனது பணியாகக் கொண்டுள்ளார். தமிழகத்தில் பிரபல வேளாண் இதழ்களில் கட்டுரைகள் எழுதுவதுடன், நிறைய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

சக உழவர்களின் வாழ்வுக்கான உந்துதலை ஏற்படுத்த, கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையம், இயற்கை வேளாண்மை வளர்ச்சி மையம், சந்தை, பாரம்பரிய விதைகள் மையம் போன்ற முகநூல் குழுக்களில் தீவிரமாக எழுதி, எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய பதிவுகளைப் பதிவு செய்து வருகிறார்.

மௌஸை கிளிக்கினால் அரிசியும் பால் பாக்கெட்டும் உற்பத்தி செய்ய இயலாது என்பதை வரும் தலைமுறைகள் உணர்ந்து, எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பது இவரது விருப்பம்.

எழுதியவர் : (22-Dec-15, 10:31 pm)
பார்வை : 205

மேலே