காலம்
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நகர்ந்துகொண்டேயிருக்கிறது. காலத்துக்கு மாதம், வருடம் தெரியாது.மனிதர்கள்தான் அதைப் பிரித்துவைத்திருக்கிறார்கள்.
இயக்கமோ ,மாற்றமோ இல்லைஎன்றால் அங்கு காலமும் கிடையாது.நட்சத்திரங்களும் கோள்களும் இயங்குகின்றன. அதனால் காலமும் உருவாகிறது.இயங்குவதால் மாற்றம் உருவாகிறது .வயதேறுகிறது.
இயக்கமும் மாற்றமும் இல்லாத பொருள்கள் அழிவற்றவையாக விளங்குகின்றன .
மனிதர்கள் இயங்குவதற்கு வசதியாகத்தான் நேரத்தையும் காலத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் .எப்பொழுது எங்கு ஒன்று சேர்ந்து ஒரு வேலையைச் செய்வதாக இருந்தாலும் நேரம் ,காலம் தேவைப்படுகிறது .
தூரமும் காலமும் பிரிக்கமுடியாதவை .தூரமே இல்லாவிட்டால் காலமும் இருப்பதில்லை .நாம் எங்கும் போகவேண்டியதில்லை என்றால் நமக்கு காலமே தேவைப்படாது .நாம் இயங்கவே இல்லையென்றால் நமக்குக் காலத்தைப் பற்றி கவலையில்லை .
உயிர்கள் ,பொருள்களை வைத்துதான் காலம் என்பதே உணரப்படுகிறது .மனிதன் காலமாகிப்போகிறான்.காலமானபின் அவன் மாறுவதில்லை .பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே காலம் வேலை செய்கிறது .
காலம் நம்மீது நிர்பந்தங்களைத் திணிக்கிறது .நாம் காலமாகமாட்டோம் என்றால் இயங்குவதே அர்த்தமற்றதாகிறது . இறப்புக்குள் ஏதேனும் செய்யவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள் .காலம் அதை நடத்திவைக்கிறது .