பதில் சொல்லிவிட்டு போங்கள்

இந்த நகரம்
ஒரு பறவையின் பார்வையில்
மேலிருந்து பார்க்க அழகாய் இருக்கிறது

தனித்திருக்கும்
மூன்று வயது சிறுமியை
நெருங்கிய சொந்தமொன்று
அருவருப்பாய் அணைக்கிறதே
அது பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

"நீ நல்லா வேலை செய்ற
உன்னைப் பர்மனன்டா வச்சுக்கட்டுமா?"
எனப் பெண்களிடம் கேட்கும்
உயரதிகாரிகளின் அசிங்கங்கள்
பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

"வீட்டு வேலை செஞ்சோமா
சீரியல் பாத்தோமா ன்னு இல்லாம
எவன் கூட இவளுக்கு அரட்டை ? "
அலைபேசிகளைச் சோதிக்கும்
சந்தேகப் பிசாசுகள்
பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

இரண்டு மகளைப் பெற்ற தாயிடம்
கணவனின் கருமாதியில்
யு லுக் செக்ஸி
எனச் சிரித்தவன்
பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

எப்படியாவது இவளை ......................
எனக் குறிகளைத் தூக்கித் திரியும்
புழுக்கள் துளைக்காத
உயிருள்ள பிணங்கள்
பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

இப்படி ஒவ்வொரு நாளும்
பறவையின் கண்களுக்குத் தெரியாமல்
சக மனுஷியின் சதையைத் தின்னும்
அபாயகரமான ஆள்
நீங்கள் இல்லைதானே ?

எழுதியவர் : ராம் வசந்த் (2-Jan-16, 9:52 am)
பார்வை : 143

மேலே