எழுத்து திருட்டு
இந்த நாட்டில் தேவைக்கு மேல் சேர்ப்பவர்கள் தான்
உண்மையான திருடர்கள்..
இல்லை இல்லை கொள்ளைக்காரர்கள்;
திருட்டு கூட ஒரு வகையில் பயனுள்ள விஷயம்,
தேவைக்காகதான் சில பொருட்கள் திருடப்படுகின்றன!
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் திருடப்படும்,
ஜகத்தினை அழிப்பதற்கு பதில் திருட்டு ஒன்றும்
அவ்வளவு பெரிய குற்றமில்லை;
கொள்ளை மட்டுமே குற்றம் என்பதை எல்லோரும் அறிக!
கொள்ளைகளை காலம் காலமாக சகித்து பழகியவர்கள் மக்கள்
அதனால் தான் மீண்டும் அவர்களுக்கே வாக்களிக்கிறோம்?
சரி திருட்டு பயனுள்ளது மட்டுமல்ல,
ஒரு வகையில் ஞாயமும் கூட! எப்படி?
ஒன்று:
"பிள்ளையாரை திருடி வந்து வைத்தால் தான்
நம்மூர் கோயிலுக்கே லட்சணம், என்பதை அறியவும்!"
இரண்டு:
"தயவு செய்து புத்தகங்களை கடன் கொடுக்காதீர்கள்;
எனது நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் எல்லாம்
என்னால் கடன் வாங்கப்பட்டவை தாம்.!"
அதனால் உணவுக்கு திருடினாலும்
உணர்வுக்கு எழுத்தில் திருடினாலும்
வருந்தாதீர்கள்.
செல்வத்தை என்னிடம் திருடினால் மட்டுமே
அதை இழந்ததால் நான் வருத்தப்படுவேன்;
என் எழுத்தை யாரேனும் திருடினால்
எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே..
ஏனெனில்
அதன் வெளிச்சம் தேவைக்காகத்தான்
களவு போனது, என களிப்படைவேன்..!