சாதிக் கல்லறையிலிருந்து

இனி எப்படி உன்
சாதி –என்னை
உன்னிலிருந்து பிரித்தாயும் ?
....
உற்று நோக்கு
உன் வீட்டு பூசையறையில்
சாந்து குழைத்த என்
பாதரேகைகள்
பதிந்து கிடக்கும் .
...........
நீ அரவணைக்க தவறிய
உன் மூப்பெய்திய தாயொருத்தியின்
முதுகு தேய்த்து
முழுக்காட்டி விடும்
என் சகோதரியின்
விரலுக்கிடையில்
கசடாக கழண்டோடுகிறது
இத்தனை நாள்
ஒட்டிக்கொண்டிருந்த
சாதியத்திமிர் ..
............................
விபத்தொன்றில் வீழ்ந்திருந்த
சாதிவெறியில் புடைத்தெழும்
உன் நாளங்களுள்
உயிராக ஓடிக்கொண்டிருக்கும்
நான் ஈந்த
ரத்ததானம் .
..............

இனி எப்படி உன்
சாதி –என்னை
உன்னிலிருந்து பிரித்தாயும் ?

எழுதியவர் : சிந்தா (4-Jan-16, 7:27 pm)
பார்வை : 99

மேலே