தை திங்கள்

தமிழே தைமகளே பொங்குக பொங்கல்

விசும்பின் விழும் துளியில்,
ஆர்பரித்து ஆடிவரும்
காவிரியின் கவின் நடையில்,
உழவின் ஏர்முனையில்,

கழனிகள் உழுது ,
நாற்று நட்டு,
பயிர் வளர்த்து,
கதிர் அடித்து,
புதுப்பானை மஞ்சள்கட்டி,

புத்தரிசிப் பொங்கலிட்டு,
சுற்றத்தோர் சூழ்ந்திருக்க ,
தைமகளின் மடிவைத்து ,
கதிரவனுக்கு நாம் படைத்து ,

'பொங்கலோ பொங்கலென்று'
நன்றி நினைப்போம்
வழிவழியாய் தொழுதுநிற்போம்.

வைக்கோலை , வரப்பிடைப் புற்களை
மேயும் ஆவினத்திற்கொரு விழா...!,
கறந்து தரும் வெண்பாலில் திருவிழா ..!

பசுக் கழிவில் இயற்கை உரம்
பல்லுயிரில் பயிர்வளம்
மண்வளம் உயிர்காக்க
பசுமைப் பூமி காக்கும் புதுவிழா !

உழன்றும் உழவே தலை என்றும்.,
விழைவதும் விட்டோம் என்பார்க்கும்.,
உயிர்வளர்க்கும் உபாயம் 'உழவே'
என்னும் வள்ளுவம் உணர்த்த பெருவிழா !

வாழிய தமிழ்..!வாழிய தைமகள் ..!
வாழிய உழவர்.!வாழிய புவிமாந்தர் !
வாழிய! வாழியவே !

எழுதியவர் : மின்கவி (11-Jan-16, 1:24 pm)
பார்வை : 308

மேலே