பொங்கலோப் பொங்கல்

கரும்புகள் அடுக்கி வைத்து - மண்
..........கலத்திலே மஞ்சள் கட்டி
விரும்பிய புதுநல் அரிசி - உடன்
..........வெல்லமும் அளவில் இட்டு
மங்கல அடுப்பில் வைக்க - அது
..........மணத்தொடு பொங்கும் நேரம்
பொங்கலோ பொங்கல் என்று - நாம்
..........போற்றியே வாழ்த்து வோமே!

அந்தப் பொங்கல் போல்-

வீடெல்லாம் மகிழ்வு பொங்க
..........வீதியெலாம் கோலம் பொங்க
நாடியநல் வளங்கள் பொங்க
..........நட்பொடுவுள் அன்பும் பொங்க
தேடியசெல் வங்கள் பொங்க
..........தெய்வத்தின் அருளும் பொங்க
கூடியவித் திருநாள் அதனில்
..........கூறினோம்யாம் கோடி வாழ்த்தே!

[விருத்தங்கள்]

அன்புடன்,
விசயநரசிம்மன்

எழுதியவர் : விசயநரசிம்மன் (17-Jan-16, 10:55 am)
பார்வை : 3760

மேலே