காதல் கணவனிடம் ஆசை பெருக்கெடுப்பு

கோழி கூவும் அதிகாலையில் எழுந்து...
பல் துலக்கி...
உப்பிட்டு நீராகாரம் குடித்து...

கூண்டுக்குள் அடைபட்டிருக்கும்
கோழிக் குஞ்சுகளை திறந்துவிட்டு கொஞ்சி....

மா மா என்றழைக்கும்
கன்றுகளிடம்
முகத்தோடு முகம் வைத்து தேய்த்து கொஞ்சி...

மீண்டும் படுக்கையில் உருள
ஆசை கொண்டு படுத்தபோது
மனதில் வெள்ளமாக
ஒரு ஆசை பெருக்கெடுப்பு....

நம் வீட்டு குளியலறையில்
எச்சில் உமிழ்ந்தால்
அடுத்த வீட்டு முன்வாசலில் தெறிக்கும்
மும்பை அடுக்கு மாடிக் குடியிருப்பில்
குடியிருக்கும் அன்புக் கணவன்
விடுமுறைக்கு வந்திருப்பதால்
என் பக்கத்தில் வந்து....

என் கன்னக்குழியை வருடி
உதட்டோரத்தில் கோலமிட்டு
அதிகாலை குதூகலத்தை
மேலும் குதூகலப்படுத்தி
அன்றைய நாளை
அன்பில் மூழ்கடிக்கச் செய்யும் என்று
நான் ஆசை பெருக்கெடுப்பில்
படுக்கையில் புரள...

ஆனால்....
கணவனிடமிருந்து
என் முகத்தில் வந்து விழுந்து
அறைந்த மோசமான வார்த்தைகளும்,
காலணிகளும்
கனவுகளை கலைத்ததோடு
என் காலடியில் தஞ்சமடைந்திருந்த
வெள்ளை பூனைக் குட்டியையும்
பதற வைக்கிறதே...

எழுதியவர் : சாந்தி ராஜி (24-Jan-16, 6:55 pm)
பார்வை : 114

மேலே