எழுத்து- 25-01-2016 ====== நான் உன்னை நினைக்காத நாளுண்டுமா======

எழுத்து- 25-01-2016
====== நான் உன்னை நினைக்காத நாளுண்டுமா?======

நான் உன்னை நினைக்காத நாளுண்டுமா?
நன்னீரில் நனையாத காலுண்டுமா?

கண்முன்னே இல்லையெனில் மறந்திடுமா!-உன்
கருணைமுகம் எனக்குள்ளே இறந்திடுமா?
விண்மீன்கள் வான்விட்டு மறைந்திடுமா?-நான்
விழுந்துவிடா தெனைத்தாங்கி இருந்திடுமா?
==நான் உன்னை நினைக்காத

தலைதுவட்டிப் போகாத ஈரம்-உன்
தயவுகளால் இதழோரம் ஊறும்!
கட்டவிழ்த்த உன்கூந்தல் பாரம்!- உன்
காலடியில் எனக்கட்டிப் போடும்!
==நான் உன்னை நினைக்காத

மலைமுகட்டை கதிர்முத்தப் போகும்-இந்த
மாலைகளை யார்மூடப் போகும்!
தலைசிலிர்க்க அலைகடலும் மோதும்- நீ
தடுக்க,இல்லை அதுவதற்குப் போதும்!
==நான் உன்னை நினைக்காத

பூக்களெலாம் செடிகளிலே ஆடும்! –உன்
பொன்விரல்கள் தழுவாமல் வாடும்!
நாக்களெலாம் இழந்ததுவோ ஊரும்! – இனி
நமைப்பேச வழியின்றிச் சோரும்!
==நான் உன்னை நினைக்காத
============ ===============

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (25-Jan-16, 7:45 pm)
பார்வை : 444

மேலே