உயிர்த்தெழுங்கள் ஹனுமந்தப்பா

(நம் தேசம் காக்கும் மாவீரர் அனைவருக்கும் சமர்ப்பணம்)

குருதி குத்தும் பனியில்
குறை கூறாமல் பணியாற்றியவனே...
உன் நெஞ்சின் உரம் கண்டு - அந்த

உறை பனியும் இனி வெட்கி உருகிடுமே...!!

எத்தனை சோதனைகள் வந்தாலும்
அத்தனையும் தூசு தட்டி விட்டு
எல்லை காத்து சாதித்து
மார் தட்டி நம் கீதம் முழங்கிட்ட சிங்கமே..!!

நாடு காக்க வீடு கடந்த நல்மகனே
எதிரி மட்டும் அல்ல,
உன் உயிர் பறிக்க இத்தனை நாள்
எமனும் தான் அஞ்சி நின்றான்....!!!

உன்னை இந்த மண்ணில் புதைக்கவில்லை
பாரதத் தாயின் வயிற்றிலே விதைக்கின்றோம்
ஆற்றல் மொத்தம் திரட்டி காற்றாற்றாய்
ஆர்ப்பரித்து நம் தேசம் அரவணைக்க வா...!!!

பாலூட்டிய உன் தாய் வயிற்றில் பால் வார்க்க
பால்முகம் மாறா உன் மகள் முகம் பார்க்க
பார்போற்றும் நம் பாரதம் காக்க
மீண்டும் உயிர்த்தெழுந்து விடு சகோதரா...!!!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (11-Feb-16, 8:33 pm)
பார்வை : 87

மேலே