நீ வரும் வரை-14

நீ வரும் வரை-14

நீ அழகாக துயில் கொள்ள
வேண்டுமென்றே ரத்தம் உள்பட
வெளியேற்றி விட்டேன் என் இதயத்திலிருந்து...
எப்படி உயிர் வாழ்கிறாய்?...
என்று கேட்பவரிடம் உன்னை காண்பித்து
இவள்தானே என் உயிர் என்று
புன்னகைத்து பதிலளிக்கிறேன்....

(முன்கதை சுருக்கம்- ரவி பிரியாவின் காதலை விளையாட்டாய் எண்ணி விட, இருவரும் பிரிந்து இரண்டு வருட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்...அதற்குள் பிரியாவுக்கு திருமணம் நிட்சயிக்கபட்டிருந்தது....இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பிரியா ரவியை கோவிலில் பார்த்தாள்...சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் பேசிகொள்ளாமலே பிரிந்து விட மீண்டும் தன திருமண ஏற்பாட்டில் சிறிதும் விருப்பம் இல்லாமல் கலந்து கொள்ள ஆரம்பித்தாள் பிரியா..)

பிரியா இன்னைக்கு நாங்கலாம் புடவை எடுக்க போறோம், நீயும் வாடி என்று பிரியாவின் அம்மா அழைத்தும் பிரியாவுக்கு போக இஷ்டம் இல்லை...
இல்லமா நான் வரல நீங்களே போய் பர்சேஸ் பண்ணிட்டு வாங்க, எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல என்று சொன்னவளை ஒரு வார்த்தை கூட திட்டாமல் சரி, உன் இஷ்டம் என்று அம்மா விட்டு விட்டதை நினைத்து அவளுக்கே ஆச்சரியமாக தான் இருந்தது...எப்படி எப்பவும் என்ன சொன்னாலும் வந்தே தான் ஆகணும் என்று ஒற்றை காலில் நின்று பிடிவாதமாய் தன்னிடம் காரியத்தை சாதித்து கொள்பவள் இன்று வரவில்லை என்றதும் சரி என்று விட்டுவிட்டாளே...என்னவாக இருக்கும் என்று பிரியாவுக்கு சிறிது சந்தேகம் வந்தாலும் அவள் இருந்த மனவலியில் எதையும் சிந்திக்க அவளுக்கு மனமில்லை...

விட்டால் போதும் என்று கண்களை மூடிக்கொண்டு தனி அறையில் நாற்காலியில் காலை மடக்கி அமர்ந்துகொண்டாள்....

வீட்டில் எல்லாரும் கடைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர், ஒவ்வொருவரையும் கிளம்பிட்டீங்களா என்று போன் போட்டு அம்மா கேட்பதிலிருந்து மிக பெரிய பட்டாளமே போட்டிபோட்டு கொண்டு அந்த கடையை கதிகலங்க வைக்க போகிறது என்பது மட்டும் புரிந்தது...

ஒருவேளை ரவியை முதல் முறை பார்க்காமல் இருந்திருந்தால் அவன் இவள் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் இவளும் தன் கல்யாணத்தை நினைத்து எப்படி எல்லாமோ கனவு கண்டிருப்பாள்...

அம்மா எனக்கு பர்புள் கலர்ல சின்ன சின்ன பூவா, சிம்புளா சின்ன பார்டர் வச்ச புடவை தான் வேணும் என்று அடம்பிடித்திருப்பாள், அதற்க்கு அவள் அம்மாவோ நீ என்ன இல்லாதபட்ட குடும்பத்துக்கா வாக்கப்பட போற, இல்ல நாம தான் எதுவும் இல்லாம இருக்கோம...சின்ன பூவா சின்ன பார்டரா, அதுவும் சிம்புளா கல்யாண புடவை எடுத்தா பாக்கறவங்க என்ன சொல்வாங்க என்று அம்மா கோவப்பட....அம்மா அது தான் இப்ப இருக்க பேஷன்..என்று பிரியா விடாமல் கெஞ்சி கேட்க அதலாம் முடியாது என்று அம்மா அழுத்தம் திருத்தமாய் கூற இவளோ எனக்கு தெரியாது, இது என்னோட கல்யாணம், என் இஷ்டப்பட்ட படி தான் புடவை வேணும்...வேணும்னா உனக்கு பிடிச்ச மாதிரி புடவை எடுத்து என் கல்யாணத்துல நீ கட்டிக்கோ யாரு வேணாம்னு சொன்னா என்று வாதுக்கு நின்றிருப்பாள்...கடைசியில் என்னமோ பண்ணி தொல என்று அம்மாவும் பிரியாவின் இஷ்டப்பட்ட படியே விட்டிருப்பாள்..

ஆனால் இன்றோ கல்யாணத்தில் பிரியா வைத்து கொள்ளும் பொட்டு உள்பட அவளுக்கான எல்லாமே அம்மாவின் விருப்பமாய், செலக்ஷனாய் மாறிப்போனது...அதை கண்டுகொள்ளும் நிலைமையில் கூட பிரியா இல்லை...
இது பிடிச்சிருக்கா?...இங்க பாரு இது எப்படி இருக்கு?...இந்த டிசைன் உனக்கு அழகா இருக்கும், இந்த கலர் உன் நிறத்துக்கு பொருத்தமா இருக்கும்...இப்படி அம்மா எது சொன்னாலும் ம்ம்... ம்ம்... ம்ம்... என்று மட்டுமே பதிலாய் கூறிவிட்டு மனதுக்குள் புழுங்கி கொள்வாள்...

அம்மாவோ கல்யாணத்தில் எல்லா பொண்ணுக்கும் வரக்கூடிய நார்மல் பயம் ,பதட்டம் தான் என்று எளிதாக எடுத்துகொண்டு கல்யாண வேலையில் மும்மரமாகிவிடுவாள்....

இன்று அதே போல் தான் பிரியா வரவில்லை என்றதும் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டாள் அம்மா...

ஆனால் இன்று அம்மா அடங்கி, விட்டு கொடுத்து போனதற்கான காரணம் பின்னே தானே தெரிந்தது பிரியாவுக்கு....வேறு ஒன்றும் இல்லை திருமணம் நிச்சயக்கப்பட்டு இத்தனை நாளில் பிரியாவும் அவளின் எதிர்கால கணவனும் ( பாலாவும்) பார்த்துகொள்ளவே இல்லை, ஏன் பேசிக்கொள்ளவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும்...

பாலாவுக்கு வேலை பளு அதிகம் இருந்ததால் அவனுக்கு பேச நேரம் இல்லை, பிரியாவுக்கோ மனபளு அதிகம், அதனால் அவளுக்கோ பாலாவை பற்றி யோசிக்க கூட நேரமில்லை...இன்றோ திடீரென பாலாவுக்கு பிரியாவை சந்தித்து பேச ஆசை மனதில் முளைத்துவிட்டது...எல்லாரிடமும் அனுமதியும் வாங்கியாயிற்று ..பிரியாவின் வீட்டிலும் அதற்காக தான் அவளை கடைக்கு கூட்டி போகாமல் வீட்டிலேயே விட்டு செல்ல திட்டமிட்டனர்...

பிரியாவிடம் சொன்னால் அவள் சம்மதிக்கமாட்டாள் என்று தான் அவளுக்கு சொல்லாமலே இந்த மீட்டிங்கிற்காக எல்லாரும் திட்டமிட்டு வெற்றியும் அடைந்துவிட்டனர்...

ஒரு பக்கம் பிரியாவின் குடும்பம் ஷாப்பிங் செல்ல கிளம்பவும், மறு பக்கம் பாலா வரவும் சின்ன இடைவெளி தான் இருந்தது...தனிமையில் மன வலி தீர அழுது தீர்க்க நினைத்த பிரியாவுக்கோ பெருத்த ஏமாற்றம்...

பிரியா...என்று சர்ப்ரைஸ் குடுக்கும் நோக்கத்தில் பாலா மெதுவாக அவள் கண்களை தன் கைவிரல்களால் மூட அவள் விழிகளோடு ஒட்டிகொண்டிருந்த கண்ணீர் துளிகள் அவன் விரல்களை சிறிது நனைத்தது...

என்ன ஆச்சு பிரியா, நீ எதுக்கு அழுத...என்ன பிரச்சன என்று தன் எதிர்கால மனைவின் துன்பத்தை பகிர்ந்துகொள்ள எண்ணி பதறி துடித்த பாலாவை பிரியா நிச்சயமாக மிஸ் செய்ய தான் போகிறாள்..இவ்வளவு அருமையான கணவன் கிடைக்க எந்த பொண்ணும் கொடுத்துவைக்க வேண்டும் என்ற அளவுக்கு பாலா ரொம்பவே நல்லவன் தான்...ஆனால் என்ன செய்ய... ஒருவேளை ரவி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இது எல்லாருக்கும் சரி என்றே படும்...ஆனால் இப்போதோ பாலா எவ்வளவு யோக்கியன், நல்லவன் என்று சொன்னாலும் அவனோடு பிரியாவை சேர்த்து வைத்தால் என்னை காதலுக்கே விரோதி என திட்டி தீர்த்துவிட நிறைய பேர் இருப்பார்கள்...காரணம் ரவியை நல்லவனாகவும் அவர்களின் காதலை புனிதத்திலும் புனிதமாக , மனதோடு மெல்லிய ஸ்பரிசமாக முன்னமே நான் கூறிவிட்டதால் இப்போதைக்கு பிரியாவை பாலாவோடு சேத்தி வைக்க முடியாது....

நீங்க எப்படி இங்க என்று சிறிது குழப்பத்தோடும் அதிர்ச்சியோடும் பிரியா கேட்க அதுவா உன்ன பாத்து பேசணும்னு தோணுச்சு, அதான் வந்தேன்.. அது சரி நீ எதுக்கு அழுதுட்டு இருக்க?என்று மறுபடியும் பாலா கேட்க...
அது ஒன்னும் இல்லைங்க...சின்ன மூட் அவுட் அவ்ளோ தான் என்று பிரியா சமாளித்துவிட்டாள்...அது சரி அது என்ன வாங்க, போங்கனு கூப்டுட்டு இருக்க..
அது சும்மா மரியாதையா இருக்கணும்னு தான் ...
இவ்ளோ மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம், உன்னோட அன்பு மட்டும் போதும் என்று பாலா தன் அழகான மனதை வெளிபடுத்தினான்...
பிரியா மௌனமாக இருக்கவே பாலாவே பேச்சை தொடர்ந்தான்..

ஓகே, ஓகே அதலாம் போகட்டும், .நீ சீக்கிரம் கிளம்பி என்கூட வா, நாம இப்போ எங்கயாவது வெளிய போகலாம்..

வெளியவா???.... என்று தயங்கிய பிரியா வேண்டாம் பிடிக்கவில்லை என்பதை அம்மாகிட்ட கேட்கணுமே என்று வேறு காரணம் கொண்டு கூற முயன்றாள்...அவனோ சரி இந்தா போன் கேட்டுக்கோ, அவங்க எல்லார்கிட்டயும் பெர்மிஷன் கேட்டு தானே உன்ன பாக்கவே வந்தேன்..என்று தான் அனுமதி பெற்றுவிட்டேன் உனக்கு வேறு வழி இல்லை என்றபடி பாலா பிரியாவையே பார்க்க பிரியாவோ மானசீகமா தன் தலையில் அடித்துக்கொண்டு வேற என்ன செய்றது போகத்தானே வேண்டும் என்று நினைத்தபடி
பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க, ரெடி ஆகிட்டு வந்தடறேன் என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று எல்லாம் தன் தலைவிதி என்று எண்ணிக்கொண்டு.. சொன்ன படியே ரெடி ஆகி வந்தாள்...

பாலாவோ அது வரை அதையும் இதையுமாக வேடிக்கை பார்த்துகொண்டு பொழுதை ஓட்டிகொண்டிருந்தான்...

நான் வந்துவிட்டேன், கிளம்பலாம் என்று அவள் தன் வளையல் சத்தத்தால் சிக்னல் கொடுக்க அவனோ "ஏய் சூப்பரா இருக்க, இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு" என்று அவள் அழகில் மயங்கி போய்விட்டவனாக அவளை வருணித்துவிட்டு ஆனால் என்று ஒரு சின்ன கேள்விக்குறியாய் நிறுத்தினான்...

ஆனால் என்ன? என்று ஆர்வமில்லை என்றாலும் அவன் மனம் வருத்தபடகூடாதே என்பதற்காக பதில் கேள்வி கேட்டாள் பிரியா...

எல்லாம் சூப்பர், ஆனா உன் முகத்துல மட்டும் சின்ன மைனஸ் இருக்கு...நீ சிரிச்சா இன்னும் அழகா இருப்ப, ஆனா சிரிக்கத்தான் மாட்டேங்குற...இருக்கட்டும்..உன்ன சிரிக்க வைக்காமல் விட மாட்டேன் என்று சின்ன சவாலை விட்ட பின் வெளியே கிளம்ப இருவரும் தயாராயினர்..

பாலா சொன்னபடி பிரியாவை சிரிக்க வைப்பான் என்பது எல்லாம் தனி கதை, இப்போதைக்கு அவளை அழ கூட விடாமல் இழுத்து கொண்டு அல்லவா போகிறான்...

இருவருமாக காரில் ஏறிய பின் மித வேகத்திலேயே போன கார் ஒரு ஹோட்டல் வாசலில் கார் பார்கிங்கில் நிற்க பிரியாவுக்கோ அதிர்ச்சியில் அழுது விடுவோமோ என்ற பயம் வேறு...பின் என்ன, ரவியோடு முதன் முதலாய் சில நிமிடங்களை அவன் மூச்சு காற்றோடு பகிர்ந்து கொண்ட அதே ஹோட்டலுக்கு தானே இவனும் அழைத்து வந்திருக்கிறான்...

மறுக்க முடியாமல் உள்ளே சென்றாள்... இவ்வளவு பாலாவுக்காக பொறுத்து கொள்கிறாளே என்றில்லாமல் அதே டேபிளிலேயே ரவியோடு தன் உணர்வுகளை பகிர்ந்துகொண்ட அதேடேபிளிலேயே பாலாவும் அமர பிரியாவுக்கோ வியர்த்து கொட்டியது...விழிகளில் வழிய வேண்டிய நீர் முகத்தில் அருவி போல் வியர்வையாய் கொட்டியது...

பாலவோ எதையும் கண்டுகொள்ளாமல் உன்னக்கு என்ன பிடிக்கும், என்ன ஆர்டர் பண்ண என்று கேட்க "எனக்கு காப்பி போதும்" என்று பிரியா சிம்பிளாக கூறிவிட்டாள்....

பாலா ஆர்டர் கொடுத்துவிட்டு பிரியாவையே பார்க்க பிரியாவுக்கோ இதே போல தன்னை பார்த்துகொண்டிருந்த ரவியை போலவே பாலா தெரிய ஆரம்பித்துவிட்டான்...பதட்டத்தில் வியர்வையிலேயே நனைய ஆரம்பித்த பிரியாவுக்கு அடுத்த அதிர்ச்சி விரைவிலேயே காத்துகொண்டிருந்தது...

எழுதியவர் : இந்திராணி (19-Feb-16, 1:44 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 317

மேலே