வண்ணம்

இரவு வந்து வெகு நேரமாகியிருந்தது
வாகன புழுதி முழுதும் அடங்கியிருந்தது
தெருக்களும் பரபரப்பை ஓரங்கட்டிவிட்டு
சற்று ஓய்வெடுக்க தயாராயிருந்தது

மனிதர்களால் நெளியும் பெருநகரின்
சாலை ஓரத்தில் ஏடிஎம் எந்திரத்திற்குமுன்
நரை தழுவி கூன் விழுந்திருக்கும் பூக்காரி மட்டும்
தன் அலுவலை முடிப்பதாய் இல்லை

அவளின் கடையில்
இன்று விற்று முடித்திருக்கவேண்டிய பூக்கள்
ஒரு புறம் மரணித்திருந்தது- மறுபுறம்
நாளைக்கான பூக்கள் மலர்ந்து கொண்டிருந்தது

கால் உடைந்த ஒரு நாய்
கால் கடுக்க நிற்கும் ஒரு தெரு விளக்கு
கண்கொட்டாமல் பார்க்கும் நிலா மற்றும்
இந்த பூக்கார கிழவி இணைந்து
யாரும் பார்க்காத ஒரு ஓவியத்தை தயாரிக்கிறார்கள்
அவளின் வயோதிக சுருக்கங்களின் வழி
ஓவியத்திற்கான வண்ணம் கசிகிறது....


-டயானா

எழுதியவர் : மேரி டயானா (24-Feb-16, 12:28 pm)
சேர்த்தது : மேரி டயானா
Tanglish : vannam
பார்வை : 70

மேலே