இடர்வெளி

அன்றில் பறவையின்,
சரியான உதாரணங்கள்,
நீயும் நானுமென,
தாராளமாய் சொல்லலாம்,
அவ்வளவு ஒற்றுமை,
நம்மிடை வளர்ந்த உறவில்,
நீங்கியிருக்க சம்மதமில்லை,
அப்படியான சிந்தனையுமில்லை,
நான் சினப்பட்டாலும்,
நீ ரணப்பட்டாலும்,
சிதறாது தொடர்ந்தது பயணம் !
அதே நாழிகளில்,
உள்ளே நிகழத்துவங்கியிருந்தது !
முளையாய் ஒரு விரிசல் !
கொஞ்சம் கசப்பும் உவர்ப்பும்,
உறைபடத்துவங்கிற்று !
என்ன செய்யலாம் !
சிந்திப்பது சிரமமாயிருந்தது !
ஆயினும்,
ஒருவரை ஒருவர் !
குறைகூறி நிந்திப்பதில்,
ஒரு குறையுமில்லை !
சரி தொடரவேண்டாம் என,
நினைக்கையில் நிந்திப்பில்,
ஒரு பெரும் பிரளயம் !
வார்த்தைகள் தடித்து !
வீசப்பட்டோம் ஆளுக்கொரு திசையில் !

சந்தித்தேன் !
முதன்முதலாய் !
அவளை வெறுத்த நாட்களை !
அவள் எனை வெறுத்த நாட்களை !
அவளால் தொலைந்த நாட்களை !
அவளை தொலைத்த நாட்களை !
நிஜமாய் !
ஆணென்றும் பாராமல் !
என் அழகுக்கு முக்காடு போட்டவள் !
ஆகாத பிறவி என்று பெயரெடுத்தவனை,
தேவதூதன் என வர்ணித்தவள் !
காரியங்களில் கால்வைத்தால்,
வெற்றி உன் விரல்களின் உடமை என்றவள் !
செய்தது பொறுக்காமல் சினப்பட்டால்,
பெய்கிற மழையாய் விசும்பி அழுகிறவள் !
யோசித்தால்,
அவளுக்கு நான்தான் சரியற்ற துணை !
நானே அவள்தனின் குறை !
ஒன்றாய்த்தான் இருந்தோம் !
ஒன்றைத்தான் விரும்பினோம் !
ஒற்றுமை தவிர வேறில்லை !
என்றபோதும் !
இந்த பிரிவன்றோ சொன்னது,
அவளது மகத்துவத்தை !
தேவையானதுதான் இந்த இடைவெளி !
ஒட்டியிருப்பது சௌகர்யமே !
ஆயினும் வெட்டியிருக்கும் நாட்களன்றோ !
உறவின் அற்புதம் உணர்த்திற்று !
இதோ !
இப்போது எனக்குள் அவள் !
தெளிந்த நீரோடையில்,
அமிழ்ந்து எழுந்த புது தேவதையாய் !
கிளம்பிவிட்டேன் !
அவள் திருமுக தரிசனத்திற்கு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-Mar-16, 11:11 pm)
பார்வை : 53

மேலே