போவோம் வா கனவுக்குள்ளே

சில்லுனு சிரிக்கிறியே.. சிலைபோல் இருக்கிறியே..
வெள்ளையா நிறமணிந்து.. வெள்ளாந்திய மயக்குறியே..
பல்லுல பவுடரிட்டு.. பௌர்ணமியா மின்னுறியே..
அள்ளுதே உன்னழகு.. தேவதையே பின்னுறியே..

சிக்குனு உடையணிந்து.. வெயில்பட சிணுங்குறியே..
பக்குனு பார்த்துவிட்டு.. உன்வழியே நடக்குறியே..
அக்கரைக்கு போறவளே.. அக்கறையா என்னைப்பாரே..
சக்கரையா உன்னுடம்பு.. வண்டுக்கூட்டம் மொய்ப்பதேனோ..

மல்லிப்பூ உனக்கெதுக்கு.. மென்மையிலே நீயும்பூவே..
வளையும் சங்கிலியும்.. உன்முன் மங்கலானதுவே
மச்சான அடச்சுவைக்க.. கூடைகொண்டு போவுறியோ..
மச்சுவீடு கட்டியிருக்கேன்.. மனசுக்குள்ளே வந்துபாரே..

உன்னோட அழகப்பத்தி.. வரிவரியா நானெழுத..
என்னோட வீட்டுக்காரி.. எல்லாத்தையும் படிச்சுட்டாளே..
அன்னோட முடிஞ்சிடுச்சு.. என்னோட கவிவாழ்க்கை..
தன்னோட குப்பையிலே.. கிழிச்சுத்தான் போட்டுட்டாளே..

தவறென்ன நானிழைத்தேன்.. அழகைத்தானே வர்ணித்தேன்..
கவரிமான் போலவந்து... என்கவனமெல்லாம் நீயிழுத்த..
பாவம் நான்இல்லையோ.. பரிதாபம் காட்டாயோ..
போவோம்வா கனவுக்குள்ளே.. கோபப்பட மாட்டாயே..?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Apr-16, 9:21 am)
பார்வை : 3232

மேலே