நீர்மக் கரையெங்கும் என் கவிதைக் கனவுகள்

எழுது....
நீ பிடித்த கரமும்
கவிதை என்று..!
-------------------------------

நீ என்ன பேசுவாய்...
பொய்யா... நிஜமா..
கவிதையா...!
-----------------------------------

நிலவிலிருந்து சொட்டுவதாக
இருக்கிறது
திடுமென வந்த
கோடை மழைக்குள்
நடந்த நீ...
------------------------------------------------

மிச்சம் வைத்த
முத்தத்தை பூனை
நக்கி விட்டது..
கனவு மிரண்டது...
-------------------------------------------------

ஆதிக் காடுகளில்
மீதி வழியென
இன்னும் கிடக்கிறது
ஏவாளைத் துரத்திய
பாதங்கள்...
-------------------------------------------------

தூங்கையில்
வரையும் மீசை உடனே
வளர்ந்து விடுகிறது...
------------------------------------------------

புலியாவது சுலபம்
காடென்று கதை ஆரம்பியுங்கள்
குழந்தையிடம்...
----------------------------------------------------

பெரும் மழைக்குள்
சிறு மழை
நனைவதில்லை...
-----------------------------------------------------

சாவி கிடைத்தாலும்
திறக்க வேண்டாத வீடு
ஊருக்கு ஒன்றிருக்கிறது...
-----------------------------------------------------

அருவியாய் விழுந்துவிட்ட
யோசனையை
மீட்டெடுக்க முயலுகிறது
நீர் பட்டு உருண்டு விட்ட
கல்
-------------------------------------------------------

தள்ளி விட்ட ஞாபகத்தில்
நின்று விடுகிறது
ரயில்...
-----------------------------------------------------

சுவர் உடைத்த
புரட்சியில்
ஓவியம் செத்தது...
---------------------------------------------------

நிறக் கனவுகளை
வாடி கட்டுகிறது
உன் வெள்ளை உடை...
-------------------------------------------------

பறவையான பிறகு
பெயர் தெரிய
விருப்பமில்லை...
-------------------------------------------------

கவிஜி

எழுதியவர் : கவிஜி (18-Apr-16, 11:39 am)
பார்வை : 151

மேலே