வஞ்சித் துறை

இந்நாட்டு மன்னர்கள்
ஈட்டிய செல்வத்தை
வெளிநாட்டு வங்கிகளில்
வைப்பதைத் தடுத்திடலாம்
இந்நாட்டில் ஒர்வங்கி
எல்லோரும் பயன்பெற
உருவாக்கி வைத்திடுவார்
என்றால் நன்றாமோ
அவ்வொரு வங்கியில்
வைப்பார் பெயரெல்லாம்
ரகசியமாய் வைத்திருக்க
தேவை சட்டமொன்று
அவ்வங்கிக் கணக்கில்
வந்தடையும் செல்வத்தில்
இந்நாட்டு ஏழைகளும்
பயன்பெறுவார் என்றாயின்
கையூட்டுப் பெற்று
பெருந்தொகை ஈட்டும்
மக்கள் பிரதிநிதிகள்
பயன்பெறவும் வேண்டுமிங்கு
மும்மாத காலம்
அவகாசம் கொடுத்திட்டால்
பன்னாட்டில் வைத்தபணம்
இந்நாட்டில் வந்திடலாம்
இந்நாட்டு செல்வந்தர்
பன்னாட்டில் வைத்தபணம்
கொணர்ந்தவரே வந்திடுவார்
என்றே நம்பிடலாம்
அவ்வாறு செய்தார்க்கு
குடியரசு தினத்தன்று
புகழாரம் சூட்டி
பொன்னாடை போர்த்திடலாம்
பொன்னாடை போதாது
என்பார்க் கெல்லாம்
புதியதோர் பட்டம்
அரசே கொடுத்திடலாம்