வெளிச்சத்தை வழங்காதா

கதிர் அறுக்க
அருவாளோடு
சென்ற மனைவி
வெற்றுக் கையோடு
திரும்பினாள்...!

பணிக்கு சென்ற
கணவன்
வேலையின்றி
சுத்தியலோடு
திரும்பிவந்தான் ...!

மாந்தோப்பில்
மாங்கனிகளை
திருடிவந்த மகளோ
பம்பரம்
விளையாடிக்கொண்டிருக்கும்
தம்பியை
முரசு அடிப்பதுபோல்
அடித்துக் கொண்டிருந்தாள் !

சூரியனின்
அக்கினிக் கரங்களால்
துளிர்த்திருந்த தோட்டத்து
இரட்டை இலை
சருகாய்
வாடிக் கொண்டிருந்தது....!

மேய்ச்சலுக்கு சென்ற
பசுவும் கன்றும்
புல்வெளி இல்லாததால்
பால்காரனின் கைகள்
வேலையின்றி
பரிதவித்தன ...!

இப்போதெல்லாம்
மின்சாரம்
துண்டிக்கப்பட்ட இருளில்
பதுங்கிய வறுமைப் புலியை
மெழுகுவர்த்தியால்
அடயாளம்கண்டும்
துரத்தமுடியவில்லை ....!

அந்தக்கிராமத்து ஊருணியில்
இருந்த ஒற்றைத் தாமரையும்
நீரின்றி மடிந்தது !
கருப்பு மை சுமக்கும்
விரல்களின் ஸ்பரிசத்தில்
இவர்களுக்கு ....
நாளைய விடியலாவது
வெளிச்சத்தை வழங்காதா ????

.......கா.ந.கல்யாணசுந்தரம்

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (13-May-16, 1:27 pm)
பார்வை : 62

மேலே