விநாயகக்கடவுள் --------------------------பெரிய புராணம் ---------------படித்த தோத்திர மஞ்சரி

பெரிய புராணம்
முகப்பு
தொடக்கம்

எடுக்கு மாக்கதை யின்றமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை யைந்துடைத் தாழ்செவி நீண்முடிக்
கடக்க ளிற்றைக் கருத்து ளிருத்துவாம்.

(இ-ள்.) எடுக்கும் மாக்கதை - உயிர்களைப்
பிறவிக்குழியினின்றும் எடுக்கும் தன்மையுடைய இப்பெரிய புராணம்;
இன் தமிழ்ச் செய்யுளாய் - இனிய தமிழ்ப் பாட்டுக்களாக;
நடக்கும்.....செய்திட - இனிது நிறைவேறி உலகில் நிலவுகின்ற
மேன்மையை நமக்கு அருள்செய்யும் பொருட்டு; தடக்கை ஐந்துடைத்
தாழ்செவி நீள்முடி - ஐந்து தடக்கைகளையும் தாழ்ந்த செவிகளையும்
நீண்ட முடியினையும் உடைய; கடம் களிற்றைக் கருத்துள்
இருத்துவாம் - மதயானை முகமுடைய விநாயகக் கடவுளை மனதிலே
பதிய வைப்போம்.

(வி-ரை.) எடுக்கும் மாக்கதை - எடுக்கும் என்ற
குறிப்பினால் பிறவியாகிய குழியிலிருந்து எடுக்கும் என
வருவிக்கப்பட்டது. “என்னை இப்பவத்திற் சேரா வகை
எடுத்து”சித்தி); “வினையின் குழிவாய்நின் றெனையெடுத்தார்”
(ஐயடி - புரா - 9) “எடுத்து” (திருநா - புரா - 182);
“எடுத்தருளி”(திருஞா - புரா - 731); “எடுப்ப” (மேற்படி 657)
முதலியவை காண்க.

எடுக்கும் - தொடங்குகின்றதாகிய என்றுரைத்தலுமாம்.
மாக்கதை -பெரியகதை; பெரியபுராணம் என்க. இப்புராணம் பல
சரிதங்களின் கோவையன்று என்பதும், பெருங்காப்பியமாய்த்
தொடர்ந்து ஒரே சரிதம் என்பதும் முன்னரே கூறப்பெற்றன. இதனுள்
அங்கங்களாக எல்லாத் தொண்டர் சரிதங்களும் பொருந்துவன.
ஆதலின் மாக்கதை என்று ஒருமையிற் கூறினார். இதுவும் ஆசிரியர்
கருதிய பெயரே என்பர்.

செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ்செவி - செய்திட -
செய்யும்பொருட்டு என்று உரைக்க. அன்றியும், செய் - செய்கின்ற;
திட - தட- கை - திடமுடைய பெருங்கை என்றுரைத்தலுமாம்.
அடியார்களது வலிய வினைகள் யாவையும் போக்கி அருள்
புரிவதற்குத் திடமும் பரப்பும் பொருந்திய ஐந்து கைகளும், அவர்
குறை கேட்டருளச் சித்தமாய்த் தாழ்ந்த செவியும் உடையார் என்க.

இது, விநாயக வணக்கம். இந்நூலுக்கு“மெய்ம்மொழி வானிழல் கூறிய பொருளாய” “உலகெலாம்” என்று அடி எடுத்துக் கொடுத்தார்
நடராசர். ஆதலின் அவரை முதலில் வணங்கி, அதன்பின் நூல்
தொடங்கி அஃது இடையூறின்றி இனிது நடக்கும் பொருட்டு விநாயக
வணக்கம் செய்யப்பட்டது.

சாக்கிரத்திலே அதீதத்தைப் புரிய வல்லவர் ஆசிரியர்
சேக்கிழார் பெருமான்; ஆதலின் தமக்கு இடையூறு சிறிதும்
அணுகாது என்பதை அறிந்து வைத்தாராயினும் ஆன்றோர் ஆசாரம்
பாதுகாப்பதற்கும் உலகுக்கு அறிவுறுத்தற்குமாக இங்கு விநாயக
வணக்கம் செய்தார் என்க. விநாயகப் பெருமான் தம்மை
நினைப்பவர்களுக்கு வரும் எல்லா இடையூறுகளையும் போக்கி
அவர்கள் எடுத்த காரியங்களையும் இனிது முற்றுவிக்கும் தன்மை
யுடையவர். அஃது இறைவனது திருவாணை.


“என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல்
முன்னரே யுனதுதாண் முடியுறப் பணிவரேல்
அன்னர்தஞ் சிந்தைபோ லாக்குதி யலதுனை
உன்னலார் செய்கையை யூறுசெய் திடுதிநீ”

என்பது கந்தபுராணம். இன்னும் விநாயகர் வரலாறுகளைக்
கந்தபுராணத்துட் காண்க. விக்கினங்களை எல்லாம் (இடையூறுகளை)
போக்குகின்றவராதலின் விக்கின விநாயகர் என்று அவருக்குப்
பெயராயிற்று. “குமரனும் விக்கினவிநாயகனும்” என்பது தேவாரம்.

தடக்கை ஐந்து - பண்ணியம் (மோதகம்) ஏந்தியது ஒருகை;
இதனைக் தமக்காகப் பயன்படுத்திக் கொள்வர். ஒரு கை இரத்தின
கலசம் ஏந்தியது; இதனைத் தந்தை தாயர்க்கு உபசாரத்தின்
பொருட்டு ஆக்குவர். ஒரு கை தமது ஒடித்த கொம்பினைத்
தாங்கியது; இதைக் கயமுகாசுரனைக் கொன்று தேவர்களுக்கு
அருள்புரியப் பயன்படுத்தினர். மற்ற இரண்டு கைகள் பாசமும்
அங்குசமும் தாங்கியவை; இவ்விரண்டு கைகளையும் உயிர்களைக்
கட்டுப்படுத்தும் ஆணவமாகிய மத யானையைப் பிணித்து அடக்கி
உயிர்களைக் காப்பதற்காகப் பயன்படுத்துவர். இவ்வாறு தமது கைகள்
ஐந்தில் மற்றவர்களுக்கு ஒவ்வோர்கையும்கருணையினால்
உயிர்களுக்காக இரண்டு கைகளையும் வைத்தார் என்று இவரது
கருணைப் பெருக்கைக் கச்சியப்ப முனிவர் தணிகைப் புராணத்தில்
“பண்ணிய மேந்தும் கரந்தனக் காக்கி” என்ற பாட்டிற்
பாராட்டியிருத்தல் காண்க.

கடக்களிறு - கடம் - மதம்; யானைக்கு உரியது மூன்று மதம் - இங்கு விநாயக மூர்த்திக்குத் தலை ஒன்றுமே யானை
யுருவுடையதாதலால் கன்னமதம் கபோலமதம் எனும் இரண்டுமே
கொள்ளப்படும். பெரும்பான்மைப்பற்றி மும்மதத்தன் என்று
உபசரிப்பதும் வழக்காம். முருகப் பெருமானுடன் வள்ளிப்
பிராட்டியாரைச் சேர்த்தற் பொருட்டு யானை உருவத்தோடு
எழுந்தருளிய போது மும்மதத்தன் என்ற பேர் முழுதும் பொருந்த
இருந்ததென்று பாராட்டுவர் கச்சியப்ப முனிவர்.

இன் தமிழ்ச் செய்யுள் - இனிமை என்ற பெயரேயன்றி, இனிய
பொருளும் தருதலினால் இன் தமிழ் என்றார். சொல்லால் இனிமை
இலக்கணங்களாலும், பொருளால் இனிமை இறைவனைச் சுட்டிக்
காட்டுகின்ற இயல்பாலும் உணர்க. இனிமையைத்தரும் தமிழ்ச்
செய்யுள் என்க. இனிமை - இறைவனருட் பேறு. இனிமை பயவாத
தமிழ்ச் செய்யுட்களும் உளவாதலால் அவற்றை நீக்குதலின் இன்றமிழ்
என்றது பிறதினியைபு நீக்கியது.

எழுதியவர் : (18-May-16, 5:50 pm)
பார்வை : 71

மேலே