திருவாய் மொழிந்திடுவாயா

வண்ணம் சிந்தும் பஞ்சவர்ண
கங்கை நதி மங்கைப் பூவே...
என்னில் நீ நுழைந்துச் சென்று
காதலை நெஞ்சில் ஊற்றெடுத்தாய்......


ஓர விழிப் பார்வையில்
என் உயிரைப் பிழிந்தெடுத்தாய்......


உன்னைக் காண நானெடுக்கும் முயற்சிகள்
சில நேரம் தாமதமாக வந்து
தோற்றுப் போகின்றது...
காலத்தின் முன்னே சென்று
ஏமாற்றமும் அடைகின்றது......


உன் வதனம் காணாத
சில நொடிகள் நாட்களாய் நகர்கின்றது...
உன் வதனம் கண்டுவிட்டால்
நாட்களும் நொடிகளாய் ஓடுகின்றது......


கண் விழித்து காத்திருக்கிறேன்
கனவிலும் ஏனிந்த சோதனை
வருவாயா?... என் வாசல் தேடி......


இதயம் எனும் கூட்டில்
உன் இதயம் சங்கமித்தால்
என் இன்னுயிர் தழைக்குமடி......


தளிராய் மலர்ந்த தத்தையே
தாமரைப்பூ விழிகள் கொண்டவளே
விரைவில் வந்து உயிரில் கலந்து
உன் காதலை மொழிந்திடுவாயா?...
நீ சொல்லிவிட்டால்
உன்னாலே என் வாழ்க்கை
பூக்களாய் தினம் உன்னோடு பூத்திடுமே.....

எழுதியவர் : இதயம் விஜய் (1-Jun-16, 3:07 pm)
பார்வை : 71

மேலே