இல்லார்க்கு ஈந்தார் வைத்து வழங்கி வாழ்வார் – ஏலாதி 78
தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி
வாயிழந்த வாழ்வினார் வாணிகம் - போயிழந்தார்
கைத்தூண் பொருளிழந்தார் கண்ணிலவர்க் கீய்ந்தார்
வைத்து வழங்கிவாழ் வார். 78 - ஏலாதி
பொருளுரை:
தன் தாயை இழந்த பிள்ளைக்கும்,
வாழ்க்கைக்குத் தலைவனாக உள்ள தன் கணவனை இழந்த மனைவிக்கும்,
பேச்சிழந்த வாழ்க்கையை யுடையவர்களான ஊமைகளுக்கும்,
வாணிகம் புரிந்து முதற்பொருளை இழந்தவர்களுக்கும்,
உணவுக்கு ஆதரவான செல்வத்தை இழந்தவர்களுக்கும்,
கண்ணில்லாத குருடர்களுக்கும்
வேண்டுவன கொடுத்து உதவுபவர்கள் பொருள்களை மிச்சமாய் வைத்துப் பிறர்க்குக் கொடுத்துத் தாமுந் துய்த்து இனிது வாழ்வார்.